எண்ணம். வசந்தம். மாற்றம்.

நான் யார்?

உதய தாரகை
உதய தாரகை

நான் தான் உதய தாரகை. எனது பெயர் இப்படி அமைய என்ன காரணம் என பலபேரும் கேட்கின்றனர். அதன் பின்னணி என்ன என்பதைச் சொல்லிவிடலாம் என்று எண்ணுகிறேன்.

எனது சொந்த இயற்பெயர் தாரிக் அஸீஸ் என்பதாகும். அரபுச் சொல்லான தாரிக் என்பதன் தமிழ் அர்த்தம் உதய தாரகை என்பதாகும். அதுவே, எனது நிறம் வலைப்பதிவில் எனது பெயரும் ஆயிற்று. (பெரிய ரகசியம் ஒன்று சொல்லியாச்சு!!).

எனது சொந்தவூர் பொத்துவில். இலங்கையின் தென்கோரியில் அமைந்துள்ள அழகிய கிராமமது! கவிஞர் கவிவாணன் (எனது தந்தை) 1968 இல் எனது ஊரைப் பற்றி எழுதிய கவிதையை இங்கே வாசிக்கலாம். இப்படிச் சொன்னால் போதுமா என்ன? என்னைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம் கட்டாயம் தேவைதானே! நான் வலையுலகில் பிரபல்யமானதும் என்னைப் பற்றி நிறையப் பேர் அறிவார்கள். (நெனப்புத்தான். 🙂 ) அவ்வாறு அறிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு இந்தப் பக்கத்தில் உள்ள தகவல்கள் துணை புரியும் என நம்புகிறேன்.

எனது நிழற்படத்தைப் பார்த்து “இவ்வளவு அழகான ஆளா இவரு!!” என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. இந்த நிழற்படம் எனக்கு ஒரு வயதாகவிருக்கும் போது, எடுக்கப்பட்டதாகும். அவ்வளவு தான் என்னால் என் தோற்றம் பற்றி சொல்ல முடியும். ஒரு வயசிலேயே இப்படி அழகா இருந்திருக்கிறன். இப்ப எவ்வளவு அழகா இருப்பேன் என்று யோசித்துப்பாருங்க.. (ம்… உங்களுக்குப் பொறாமை… 😆 ) ஒரு கூடை சன் லைட் ஒரு கூடை மூன் லைட்… (போதும்.. போதும்… அழகு ராசா போதும்.. 🙂 )

எழுதுவது, வாசிப்பது என்பது எனக்கு மிகவும் பிடித்தமான விடயங்கள். கணினியோடு எனக்கு அலாதிப் பிரியம்.

சும்மா சொல்லக்கூடாது, தேங்காய்ச் சம்பலும், சுடும் சோறும் நமக்கு பிடித்தமான சாப்பாடுங்கோ. முருங்கை இலையாலான பால்க்கறியின் சுவையை எந்தக் கறியாவது மிஞ்சுமா என்ன?

rise_star

இயற்கையை ரொம்பப் பிடிக்கும். நகை முகமும், இனிய சொல்லும் நல்ல செல்வம் என்னும் கருத்தில் இருப்பவன். புதிய விடயங்களை அறிய வேண்டும் என்ற ஆவல் எனக்குள் உள்ள ஓயாத அலை!

உலக உருண்டைக்குள்ளே எத்தனை விதமான உணர்வுகள் பொதிந்து கிடக்கின்றன. வெற்றி என்பது தொடர் பயணம் என்பதில் உறுதியான நம்பிக்கையுண்டு எனக்கு. வாழ்வை ஆக்கபூர்வமானதாக பார்ப்பதற்கும், அவ்வாறு வாழ்வதற்கும் எனக்கு நானே சில வரையறைகளை விதித்துக் கொண்டுள்ளேன். என்னை உணர்வுபூர்வமாக உசுப்பும் ஆளுமைகள் நிறையப் பேர் இருக்கின்றனர்.

ஆளுமைகளின் மேற்கோள்களை வாசிப்பதாலேயே எனக்குள் ஒருவித சக்தி பாய்வதாக உணர்கின்றேன். வெற்றி பெற வேண்டுமென்ற எண்ணம் அந்த ஒவ்வொரு வரிகளிலும் ஆழ பொதிந்திருக்கும். அவை வாழ்வை உயர்த்திக் காட்டும் தூண்கள். வெற்றியை அடைய ஆவலையூட்டும் ஆர்வக் கிரீடங்கள்.

எனது ஆர்வங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகின்றேன்.

நான் சஞ்சிகைகளை விரும்பிப் படிப்பேன். அதில் ஆனந்த விகடன், குமுதம், குங்குமம், Reader’s Digest, TIME, NewsWeek என்பனவற்றை குறிப்பாகச் சொல்லலாம். (என்னது இங்கிலிஸிலயும் படிக்கிறயலா?? 😆 )

நான் பார்த்த திரைப்படங்களில் அன்பே சிவம், What the Bleep do we know? மற்றும் The Da Vinci Code என்பன என்னை மிகவும் கவர்ந்தவை. (கமல் இரசிகராக்கும்….!!! 😉 )

நிழற்படங்களை வெவ்வேறு கோணங்களினூடாக எடுப்பதில் எனக்கு அதிக ஆர்வம். எனது விழிக்கோணத்தில் அகப்பட்டவைகளின் தொகுப்பை இங்கே காணலாம். இதனாலென்னவோ, நிழற்படங்கள் எடுக்கப்பட்ட கோணங்களைக் கண்டு இரசிப்பதையும், அவற்றைக் கண்டு வியப்பதிலும் எனக்கு அதிக பிரியம். எனக்கு பிடித்தமான நிழற்படங்களின் தொகுப்பை இங்கே நீங்கள் காணலாம்.

எல்லாவற்றையும் எழுத வேண்டுமென்ற ஆர்வமுண்டு. நேரம் கிடைப்பதில்லை ( இற்றைப்படுத்துகை (Update): நேரம் கிடைப்பதில்லை என்றெல்லாம் சாட்டுப் போக்குச் சொல்லக்கூடாது என்பதில் இப்போது நான் உறுதியாக உள்ளேன்). ஆனாலும், அவற்றை நேரம் கிடைக்கும் போது எழுத வேண்டுமென்று எனக்கு நானே ஆணையிட்டு எனது சிறிய குறிப்புப் புத்தகத்தில் அல்லது கையடக்கத் தொலைபேசியின் குறிப்புப் பகுதியில் விடயங்களைக் குறித்துக் கொள்வேன்.

அதிகமாகப் பேசிவிட்டேனோ? என்று நான் சந்தேகிக்கிறேன். (இதிலென்ன சந்தேகம்.. சிறிய அறிமுகம் என்டு சொல்லிட்டு இப்படியுமா…?? 🙂 )

உங்களுக்கு நன்றிகள் பல.

தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள். நிறம் பற்றி நீங்கள் நினைப்பதை எனக்கு சொல்லியனுப்புங்கள்.

  • உதய தாரகை

நிறம் என்றால்

All posts at niram blog are written by Tharique Azeez| Google+: Tharique Azeez