(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 10 செக்கன்களும் தேவைப்படும்.) [?]
இந்த வாரத்தின் புதன் பந்தல், மனிதன் மறந்துபோன அவனின் பெறுமதியைப் பற்றிச் சொல்கிறது.

கொஞ்ச காலத்திற்கு முன்னர், நான் கேள்விப்பட்ட ஒரு கதையோடு, பதிவை தொடரலாமென எண்ணினேன். அதுவே இப்பதிவாயிற்று.
ஒரு சுயமுன்னேற்ற பயிற்சிப் பட்டறையின் போது, ஒரு பிரபல்யமான சொற்பொழிவாளர், தனது சொற்பொழிவின் போது, திடீரென தனது சட்டைப்பைக்குள் இருந்து 100 ரூபா பெறுமதியான நோட்டை எடுத்து, அவையில் அமர்ந்திருந்தோரிடம் காட்டி, “யாருக்கு இந்த 100 ரூபா நோட்டு தேவை?” என்று கேட்டார்.
அவையிலிருந்தோர் அனைவரினதும் கைகள், உயரத் தொடங்கின.
“நான் இதை உங்களில் ஒருவருக்கு தரத்தான் போகிறேன். ஆனாலும் அதற்கு முன்னர், இதற்கு இப்படிச் செய்ய விடுங்கள்” என்ற கூறியவாறு, நோட்டை தாறு மாறாக கசக்கினார்.
“இன்னும் இதனைப் பெற உங்களில் யாருக்குத்தான் விருப்பம் உள்ளது?” என்று கேட்கலானார்.
ஆனாலும், அவையிலிருந்தோர் அனைவரினதும் கைகளும் மேலே உயர்ந்து தங்களுக்கு தேவை என்ற விடயத்தைச் சொல்லி நின்றன.
இருந்த போதிலும், சொற்பொழிவாளர் விடவேயில்லை. “நல்லது, நான் இதற்கு இப்படிச் செய்தாலுமா நீங்கள் தேவை என்பீர்கள்” என்று கேட்டவாறு, 100 ரூபா நோட்டை தரையில் போட்டு, தனது சப்பாத்தினால் மிதித்து அழுக்குப்படுத்தினார்.
“இன்னமுமா இதை நீங்கள் பெற வேண்டுமென விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்.
அதற்குக்கூட அவையிலிருந்தோர், எல்லோரும் தங்களுக்கு அந்த நோட்டு, தேவை என்பதை தங்கள் கைகளை உயர்த்தி சொல்லலாயினர்.
“நண்பர்களே, இப்போது நீங்கள் பெறுமதியான ஒரு வாழ்க்கைப் பாடத்தை கற்றுக் கொண்டீர்கள்.” என்றவாறு, சொற்பொழிவாளர் நடந்த நிகழ்வின் படிப்பினையை விளக்கலானார்.
“நான் இந்த 100 ரூபா நோட்டிற்கு என்னதான் செய்துவிட்ட போதிலும், அதனை நீங்கள் யாவரும் தேவை என்றே சொல்லிக் கொண்டிருந்தீர்கள். ஏனெனில், நான் எது செய்த போதிலும் அதன் பெறுமதி மாறாமலேயே இருந்தது. இப்பவும் அது 100 ரூபா பெறுமதியானதுதான்.
எமது வாழ்விலும் நாம் எடுக்கின்ற தீர்மானங்கள் மற்றும் சந்திக்கின்ற சம்பவங்கள் சில வேளைகளில், எம்மை தோற்றுப் போக வைக்கும். மற்றவர்களால் இடர்களை சந்திக்க வைக்கும். விழுந்த போதிலும் எழ முடியாதளவில் வலிகளைத் தரும்.
இப்படியெல்லாம் எமக்கு நடக்கின்ற போது, எம்மை நாமே பெறுமதியில்லாதவர்கள் போலவே உருவகித்துக் கொள்கின்றோம். இது தகுமா?” என்று வினா எழுப்பினார்.
“என்னதான் உனக்கு நடந்திருந்த போதிலும், நடக்க போவதானாலும் நீ ஒருபோதும் உன் பெறுமதியை இழக்கமாட்டாய். நீ புதிது. உன் இயல்புகள் விஷேடமானவை. நீயொரு தனித்துவமான அழகு. நீ வெற்றிகளைப் பெறப் பிறந்தவன். உன் தனித்துவமான நிலைக்கு பல வெற்றிகளைத் தர அகிலமே ஆசையோடு இருக்கிறது. உன் பெறுமதியை ஒரு போதும் மறந்துவிடாதே!” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.
- உதய தாரகை
Filed under: அதிசயம்,அனுபவம்,இணையம்,இயற்கை,உலகம்,கட்டுரை,சுவாரஸ்யம்,செய்தி,புதன் பந்தல்,வாழ்க்கை








ஏழு நாட்களும் புதனாக இருக்கக்கூடாதா ?
அருமையான விடயம். அழகாக சொல்லியிருக்கிறீர்கள் உதய தாரகை. வாழ்த்துக்கள்.
@இர்ஷாத் அலி, தங்களின் ஆர்வத்திற்கு நன்றிகள். தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள். புதன் தவிர்ந்த நாட்களிலும் பதிவுகள் வரும்.
@நிறப்பிரியை. நன்றி தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும். நிறத்துடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.
இனிய புன்னகையுடன்,
உதய தாரகை