(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 49 செக்கன்களும் தேவைப்படும்.) [?]
கதைகள் – கதைகள் சொல்லப்படுகின்ற கதைகள் என கதைகள் பற்றிய வரலாறு மிகவும் நீளமானது. சின்ன வயதில் வீட்டில் தொடங்கி பாடசாலை தொடக்கம் கதைகள் பற்றிய எமது நெருக்கம் அலாதியானது.
நாம் கேட்கின்ற கதைகளில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் எப்படிப்பட்டதாய் காணப்பட்ட போதும், அவற்றை எம் மனக்கண் முன்னே அப்படியே கொண்டுவருகின்ற ஆற்றலை ஒவ்வொரு கதையும் கொண்டிருக்கிறது. தெரிந்திருக்கும் விடயங்கள் பற்றிய கதைகள் கூட, குறித்த விடயம் பற்றிய எமது பார்வையை புதுப்பித்துக் கொள்வதற்கு வழி செய்வது உண்மை.
இங்கு கதைகளுக்குப் பஞ்சமில்லை. கதைகள் இன்றைய நிலையில், பல பெயர்கள் கொண்டு வழங்கப்படுகின்றது. அன்றாடம் ஒரு தனி மனிதன் சந்திக்கின்ற அத்தனை விடயங்களும் கதைகள் மூலமே தனக்கான இருப்பை நிலைப்படுத்திக் கொள்கிறது. “தாகமாயிருந்த காக்கா, பக்கத்திலிருந்த கற்களையெல்லாம் எடுத்து குடத்திற்குள் போட்டதாம்..” என்று விரிகின்ற காகத்தில் புத்திசாலித்தனத்தைக் காட்டுகின்ற கதையை யாரால்தான் மறந்துவிட முடியும்?
நீதிக்கதைகள் என்ற நிலையில் கதைகள் சொல்லித்தருவது, சின்ன வயசு பாடசாலைக்கால நினைவுகள். அந்த ஒவ்வொரு கதையும் கொண்டுள்ள சாதூர்யமான அனுகுகைகளை எல்லாக் குழந்தைகளும் ரசித்தேயாகும்.
ஆனாலும், ஆரம்ப காலத்தில் சொல்லப்பட்ட கதைகள் பலதும் மிருகங்கள் கதாபாத்திரங்களாய் வந்து போகின்றதும், அவை முன்னுதாரணமாய் இருக்கின்றதுமான வடிவங்களையே கொண்டிருந்தது. அது மிருகங்களிலிருந்து சடப்பொருள்கள் என பல விடயங்கள் சார்ந்த கதைகளாக பின்னர் விரிந்து செல்வதும் சுவை.
இளமைக்காலத்தில் நாம் கேட்ட கதைகள் அப்படியிருக்க, இன்றளவிலும் உலகின் அச்சாணியாய் கதைகள் தான் இருக்கிறதென்றால் மிகையில்லை. ஆசிரியர் மாணவர்களுக்குச் பாடம் சொல்லிக்கொடுப்பது, வியாபாரி தன் பொருளை வாடிக்கையாளனுக்கு அறிமுகம் செய்து, அதில் வெற்றி காண்பது, உதவி தேவைப்பட்ட நேரத்தில் அதற்கு பொருத்தமானவரிடம் உதவியைக் கேட்டுப் பெற்றுக் கொள்வதென கதை சொல்கின்ற சந்தர்ப்பங்கள் ஏராளம். இங்கு நீங்கள் “கதை சொல்லல்” என்பதற்கு வேறெதுவுமான அர்த்தங்களை உருவகித்துக் கொள்ளக்கூடாது.
கதை சொல்கின்ற ஆற்றல் ஒரு கலை. கதைகள் சொல்லப்படுகின்ற விதத்தில் தான் அதற்கான பதில்களை அழகிய முறையில் பெற்றுக் கொள்ள முடியும்.
நாம் சொல்கின்ற கதைகள், நாம் கேட்கின்ற கதைகள், நாம் சொல்ல நினைக்கின்ற கதைகள் என கதைகளின் இருப்புநிலைகளை ஒரு வகையில் வகுத்துக் கொள்ளவும் முடியும். ஆனாலும், அது இங்கு தேவையில்லை.
ஒரு நாடு பற்றி நாம் கேள்விப்படுகின்ற கதைகள் தான், அந்த நாடு, அந்நாட்டின் மக்கள் என அனைவர் பற்றிய எமது எண்ணங்களை புதுப்பித்துக் கொள்ள வழி சமைக்கிறது. அவர்கள் பற்றிய அனுமானங்களை நாம் வெறும் அவர்கள் பற்றிய கதைகள், செய்திகள் மூலமே செய்து கொள்கிறோம். இந்த நிலையில் கதை அதன் வலிமையைக் காட்டி நிற்கிறது.
வெறும் சின்னக் கதைகள் ஒரு தலைமுறையின் சிந்தனையோட்டத்தில் எவ்வாறான பாதிப்பை உண்டுபண்ணுகிறது அத்தோடு, கதைகள் சொல்லப்படாத நிலையில், தலைமுறையின் அறியாமை எந்த நிலைக்குச் செல்கின்றது என்பதை எல்லாம் உற்றுக் கவனித்தால், கதைகள் கொண்டுள்ள வலிமையை நிராசையாகவே புரிந்து கொள்ள முடியும்.
“உண்மையிலும், உண்மையானது எது? விடை: கதை” என்றொரு மேற்கோள் என் ஞாபகத்திற்கு வருகிறது.
“கதையொன்றின் ஆபத்து” என்ற தொனிப்பொருளில் TED இல் உரையாற்றிய எழுத்தாளர் சிம்மமன்டா அடிசியின் உரை மனித வர்க்கத்தின் அடையாளத்தில், வரலாற்று அனுமானங்களில் என எல்லாவற்றிலும் கதை எந்தளவு தாக்கத்தை செலுத்துகிறது என்பதை அழகாகச் சொல்கிறது.
பதினெட்டு நிமிடங்கள் நீளமான உரை – பல உண்மையான கதைகளை உங்கள் மனக்கண்ணிற்கு கொண்டு தரும். ஒவ்வொரு நிமிடமும பொக்கிஷமான கதைகள் பற்றிய ஆறுதலையும், அது தரவல்ல சக்தியையும் உங்களால் அறிந்து கொள்ள முடியும்.
நேரமெடுத்து கட்டாயம் பாருங்கள். கதைகள் காலத்தை வெல்லக்கூடியன.
- உதய தாரகை
Filed under: அதிசயம்,அனுபவம்,இணையம்,இயற்கை,உணர்வு,உலகம்,எண்ணம்,கட்டுரை,மேற்கோள்,விஞ்ஞானம்








[...] கதையொன்றின் வலிமை என்ற தலைப்பில் ஏற்கனவே, நிறத்தில் கதைகள் எமது வாழ்க்கையில் காட்டும் செல்வாக்கு பற்றி சொல்லியிருந்தேன். இன்றோ கதையொன்று சொல்லப் போகின்றேன். நீதிக்கதைகள் சொல்கின்ற படிப்பினைகள் மிகவும் நேரடியானவை. உணரப்பட வேண்டியவை. [...]