“நான்” என்றால் என்ன?

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 16 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

நேற்றைய தினம், நான் வழமையாக வாசிக்கின்ற Letter of Note வலைப்பதிவை வழமை போலவே வாசித்தேன். நிற்க, முதலில், Letters of Note என்ற தளத்தைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும்.

இரண்டு நபர்களிடையே நடக்கின்ற கடித உரையாடல்கள் சில வேளைகளில், ஒட்டுமொத்த சமூகத்தின் பார்வைக்கான அல்லது சிந்தனைக்கான களத்தை வழங்கும் சாத்தியத்தைக் கொண்டுள்ளது என்பதை வரலாறு சொல்லித்தந்திருக்கிறது.

கடிதத்திற்கான காத்திருப்பில் இது பற்றி கொஞ்சம் சொல்லியிருக்கிறேன். கடிதங்களின் உள்ளடக்கங்கள் காரணமாக, அவை உலகளவும் அறியப்பட வேண்டும் அத்தோடு அதன் உள்ளடக்கங்கள் அனைவரிடமும் உணர்வுகளை உசுப்பிவிட வேண்டும் என்பதைக் கருவாகக் கொண்டு, முக்கியமான சாரங்கள் நிறைந்த கடிதங்களையும் அதன் பின்னணிகளையும் வழங்குகின்ற தளமாக Letters of Note ஐ இனங்கண்டு கொள்ளலாம்.

இந்தத் தளத்தின் பல பதிவுகளும் என்னைக் கவர்ந்தவை. நேற்று அங்கு நான் வாசித்துணர்ந்த கடிதம் பற்றிச் சொல்லிவிட வேண்டுமென நினைத்தேன். இப்பதிவு உருவாயிற்று.

அய்ன் ரேண்ட் — புதின எழுத்தாளர், தத்துவவியலாளர் என இயல்பாக அறிமுகப்படுத்தலாம். உலகப் பிரசித்தம் வாய்ந்த இரண்டு புதினங்களின் ஆசிரியர். அதுமட்டுமல்ல, Objectivism என்கின்ற புறவய மெய்யியல் கோட்பாட்டின் உருவாக்குனர்.

இவரின் புதினமான, The Fountainhead என்பதை வாசித்து முடித்த வாசகி Joanne Rondeau, 1948 ஆம் ஆண்டு மே மாதம் இவருக்கு கடிதம் ஒன்று வரைந்தார். கடிதத்தின் சாரம் இதுதான்.

“நீங்கள் உங்கள் புதினத்தில், ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்று சொல்வதற்கு முன்னர் ஒருவர் ‘நான்’ என்பதை எப்படிச் சொல்ல வேண்டுமென அறிந்து கொள்ள வேண்டும்’ (To say ‘I love you’ one must first know how to say the ‘I’.) என குறிப்பிடுகிறீர்கள். இதை எனக்கு விளக்கியருளுங்கள்.”

இந்தக் கடிதத்திற்கான அய்ன் ரேண்டின் பதில்தான் ஒரு தனிநபர் பற்றிய அவர் மெய்யியலின் அடிப்படையையும் அதனோடிணைந்த சிந்தனையையும் தெளிவாக வெளிப்படுத்தியது. சிந்தனைக்கான கூறாகவும் அமைந்து கொண்டது.

அவரின் பதில், சொல்கின்ற நியாயங்களும் அதனைத் தாண்டிய சிந்தனைகளும் அர்த்தமுள்ளவை. அந்தப் பதில் கடிதத்தை யாவரும் படிக்க வேண்டுமென்ற இந்தப் பதிவின் தேவைகருதி தமிழாக்கம் செய்கின்றேன்.

22, மே 1948

அன்புள்ள ரொன்டியிவ்,

எனது The Fountainhead என்ற புதினத்தில் வருகின்ற ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்று சொல்வதற்கு முன்னர் ஒருவர் “நான்” என்பதை எப்படிச் சொல்ல வேண்டுமென அறிந்து கொள்ள வேண்டும்’ (To say ‘I love you’ one must first know how to say the ‘I’.) என்ற வாக்கியத்தை விளங்கப்படுத்தும் படி கேட்டிருந்தீர்கள்.

இந்த வாக்கியத்தின் கருத்து, எனது The Fountainhead என்ற புதினம் பூராகப் பரந்திருக்கிறது. நீங்கள் இந்த வசனத்தை கண்ட 400 பக்கத்திலும் இது பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. “நான்” என்பதன் அர்த்தம், யாருக்காக வேண்டியும் இருக்காத சுயாதீனமான, தன்நிறைவான கூறு ஆகும்.

ஒருவன், தன் அன்புக்குரியவர்களுக்காக மாத்திரம் இருப்பது அவனை சுதந்திரமான கூறாக உருவாக்காது மாறாக, அகநிலை சார்ந்த ஒட்டுண்ணியாகவே உருவாக்கும். ஒட்டுண்ணியின் காதலில் எந்த உயிர்ப்போ பெறுமதியோ கிடையாது.

காதல் பற்றிய வழமையான, (மிகத் தீய நிலை) பொருளற்ற அறவுரையாக கூறப்படுவது காதல் என்பது சுயநிலைத் தியாகம் என்பதாகும். ஒருவனின் சுயம்தான் அவனின் ஆன்மா. ஒருவன் அவனின் ஆன்மாவைத் தியாகம் செய்கின்ற நிலையில், அவனுக்கு அன்பை உணர யார் அல்லது என்ன எஞ்சியிருக்கப் போகிறது? உண்மைக் காதல் என்பது ஆழ்ந்த சுயநலமிக்கது. இந்தச் சொல்லின் மேன்மை பொருந்திய பொருளாக — ஒரு தனிநபரின் உயர்நிலை விழுமியங்களின் வெளிப்பாடாகவே காதலைக் கண்டு கொள்ள முடியும். ஒருவன் காதல் வயப்படுகின்ற நிலையில், அவன் தனக்கான மகிழ்ச்சியைத் தேடுகிறான் — அன்புக்குரியவர்களுக்கான தியாகத்தை அவன் நாடுவதில்லை. அப்படி தியாகம் தேவைப்படுகின்ற அல்லது எதிர்பார்க்கின்றவளாக அவன் அன்புக்குரியவளிருந்தால், அவள் அரக்கியாகத்தான் இருக்க முடியும்.

பிறருக்காகவே வாழ்கின்ற — தன் அன்புக்குரியவளுக்காக வாழ்கின்ற — ஒட்டுமொத்த மனித இனத்திற்காக வாழ்கின்ற — நிலையை, சுயமிழந்த, கூறுகள் இல்லாத அலகு எனலாம். சுயாதீனமான “நான்” என்பது, தனக்காகவே வாழ்கின்றவன். அப்போதே, அவனால், எந்த தீய சுயநிலை தியாகங்கள் பற்றிய பாசாங்கும் செய்ய முடியாமலிருக்கும். அவன் அன்பு செலுத்துபவர்களிடம் சுயநிலை தியாகத்தை எதிர்பார்க்கவும் மாட்டான். அதுதான் காதலில் திளைத்திருப்பதற்கும் நிலைத்திருப்பதற்கும் ஒரே வழி அத்தோடு இரண்டு பேருக்கிடையான சுயமரியாதை கொண்ட உறவும் வலுப்பெறவும் அதுவே ஒரேயொரு முறை.

அய்ன் ரேண்ட்.

“சுயம் என்பது மட்டுந்தான் ஒருவனின் நிலைப்பின் ஆதாரம். இருப்பதை இருப்பதாகச் சொல்லாமல், ஏதோ இருக்கிறோம் — ஆனால் இருக்கவில்லை என்ற வகையான விளக்கங்கள் பொருந்தாது. நீங்கள் நீங்களாகவே மட்டுந்தான் இருக்கலாம். நீங்களாகவிருக்காமல் இன்னொன்றாக இருக்க முயற்சிப்பதும் ஒரு வகை சுயவறுமை – சுயமிழத்தல்” என கோபாலு சொல்லச் சொன்னான்.

- உதய தாரகை —

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

உண்டியலும் காதலும்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 19 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

உலகின் அத்தனை லாவண்யங்கள், விடயங்கள் என எல்லாவற்றிற்கும் பின்னால் கவனிக்கப்படாத கதைகள் இருப்பது வழக்கம். கவனிக்கப்பட்ட கதைகள் பலவும் கூட காலத்தோடு மறைந்து செல்வதும் இயல்பாக நடப்பதொன்றுதான்.

நிறத்தில் கதையொன்றின் வலிமை பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். நாம் அறிந்திராத ஆனால் அறிந்து கொள்ள வேண்டிய பல விடயங்கள் பற்றியும் அவ்வப்போது பதிவுகளாய் உங்களோடு பகிர்ந்திருக்கிறேன்.

நேற்றைய தினம், பழைய கோப்புறையொன்றை திறக்க வேண்டியேற்பட்டது. ஒரு சில வருடங்களுக்கு முன்னர் எழுதி, கிழிக்கப்படாத பக்கங்கள் பலதையும் காண வாய்ப்பு உண்டானது.

நான் அந்தப் பக்கங்களின் வெண்மைக்குள் மைசேர்த்த நாள்களின் அழகிய நினைவுகள், அவற்றைக் கண்டவுடன் என் மனத்திரை முன் விரியக் கண்டேன்.

“நினைவுகள் அழியக்கூடாதென்றா, அவர்கள் பொருள்களை சேமித்து வைக்கிறார்கள்?” என்று திடீரென கோபாலு அதற்கிடையில் கேள்வி கேட்கிறான்.

நினைவுகளின் அழகில், இந்த நிமிடத்தின் நீட்சியும் நிம்மதியும் தொடர்ந்தால் நலமே — அவன்தான் பதிலும் சொன்னான்.

கோப்புறைக்குள் கிடந்த தாள்களில் பலதையும் மெல்ல மெல்ல புரட்டிக் கொண்டு, காலத்தின் விரைவான ஓட்டத்தையும் அதனோடே நிகழ்வுகளின் பாலான எனது கண்ணோட்டத்தையும் மனதால் நோக்குகிறேன்.

ஒரு தாள் — பல மேற்கோள்களைத் தன்னகம் குறித்து வைத்திருக்கிறது. “சிலர் மழையை உணர்ந்து கொள்கிறார்கள். ஏனையோர் வெறுமனே நனைகிறார்கள் — அவ்வளவுதான்” — ஓரமாய் இருந்து கொண்டு உண்மை சொல்லியது இந்தக் கூற்று.

“எனக்கு மகிழ்ச்சி உண்டாகட்டும் என்று வாழ்த்த வேண்டாம். எல்லா நேரமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென நான் எதிர்பார்க்கவில்லை. அதையும் தாண்டியும் மேலானதாய் இருக்க நினைக்கிறேன். தைரியம், சக்தி, நகைச்சுவை உணர்வு என்பன என்னிடம் குடிகொள்ள ஆசியுங்கள். அதுவே எனக்கு எப்போதும் தேவைப்படும்,” என்று ஆன் மொரோவ் லின்ட்பேர்க் சொன்னதாய் குறித்துள்ளேன் அந்தத் தாளின் ஒரு புறமாக.

அந்தத் தாளில் அப்படியாக மேற்கோள்கள் வாழ்ந்திருக்க, இன்னொரு தாளில் நான் அங்குமிங்குமாய் அறிந்து கொண்ட விடயங்கள் பற்றிய குறிப்பிருந்தது.

அதிலுள்ள சில விடயங்கள் பற்றி நிறத்தில் ஓரிரு வருடங்களுக்கு முன்னர் விபரமாகச் சொல்லியிருக்கிறேன். “அத்தி பூத்தாற் போல“, “அவள் சட்டையில் ஏன் அந்தப்புறமாக பொத்தான்?” என பல பதிவுகளில் அவை இடம் பெற்றிருக்கும்.

அதன் தொடர்ச்சியாய் சில சுவாரஸ்யமான தகவல்களை இன்று சொல்லலாம் என அந்தத் தாள் தூண்டியது. அதுதான் இந்தப் பதிவு.

உண்டியல்கள் பற்றிய நினைவுகள் உங்களிடம் இருக்கலாம். றப்பரினாலான உண்டியலில் சில்லறைக்காசுகள் சேர்த்து பின்னர், கொஞ்சம் சில்லறை வேண்மென்பதற்காய் கத்தரிக்கோலை அதனுள்ளிட்டு, காசு எடுத்த ஞாபகங்கள் — மலரும் நினைவுகள்.

நீங்கள் அவதானித்துள்ள ஒரு விடயத்தை இங்கு நினைவூட்டலாம் என விளைகிறேன். வங்கியிலோ அல்லது கடையிலோ உண்டியல்கள் பெரும்பாலும் பன்றி வடிவத்திலேயே செய்யப்பட்டிருக்கும். வர்த்தக விளம்பரங்களிலும் உண்டியல்களின் வடிவமாக பன்றிதான் காணப்படும்.

பன்றிக்கும் உண்டியலுக்கும் அப்படியென்ன தொடர்பு?

அந்தக் காலத்தில் ஐரோப்பாவில் பீங்கான், பாத்திரம் என்பன செம்மஞ்சள் நிறத்தாலான ‘pygg’ என்று சொல்லப்படுகின்ற ஒரு வகை களிமண்ணால் உருவாக்கம் செய்யப்பட்டது. இந்தக் களிமண் கொண்டு செய்யப்பட்ட உண்டியல், ஆங்கிலத்தில் “pygg jar” என்று அழைக்கப்பட்டது.

Pygg என்பதன் உச்சரிப்பு பன்றியைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான Pig என்பதை ஒத்திருந்ததால், Pygg jar என்பதை Pig jar எனப் பிழையாகப் புரிந்து கொண்ட குயவன் ஒருத்தனின் வினைதான் Pygg என்ற களி, பன்றியாகி வழக்கமான சேமிப்பின் குறியீடாக மாறிவிட்டது.

அந்தத் தாளின் இன்னொரு மூலையில், காதல் பற்றிய குறிப்பொன்றும் இருந்தது. அது என்ன?

டென்னிஸ் விளையாட்டின் போது, வீரரின் புள்ளியைச் சொல்கையில், பூச்சியம் என்பதைச் சொல்லும் Zero என்ற ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தமாட்டார்கள். Love என்ற சொல்லை பயன்படுத்துவார்கள். ஆமா, Love என்றால் காதல் தான் — நீங்க சொல்வது ரொம்ப கரெக்ட்.

அப்போ, பூச்சியத்திற்கும் காதலுக்கும் என்ன தொடர்பு?

டென்னிஸின் நவீனகால ஆரம்பம் இங்கிலாந்தில் தொடர்ந்தாலும், அதன் புராதன கால ஆரம்பம் பிரான்ஸிலிருந்து தொடர்கிறது. பிரான்ஸில் பிரபல்யமாகவிருந்த டென்னிஸில், ஒருவர் புள்ளிகள் பெறாத நிலையைக் குறிப்பதற்கு வழமை போலவே பூச்சியத்தைத் தான் பயன்படுத்தினார்கள்.

புள்ளியைக் குறித்துக்காட்டும் புள்ளிப்பலகையில் பூச்சியம் எப்போதும் போலவே முட்டை போன்று தோற்றம் பெற்றிருக்கிறது. அதை, அவர்கள், அவர்களின் மொழியில் முட்டை என்று சொல்லி வந்திருக்கிறார்கள்.

பிரஞ்சு மொழியில் முட்டையை, l’oeuf என அழைப்பர். டென்னிஸ் விளையாட்டு, அமெரிக்கா சென்ற போது, இந்த முட்டைக்கான பிரஞ்சுச் சொல்லை, பிழையாக அவர்கள் உச்சரித்ததால், l’oeuf என்பது love ஆனது. அதுவே, டென்னிஸ் விளையாட்டின் புள்ளியின் காதலும் ஆனது.

இப்படித்தான், பூச்சியத்திற்கும் காதலுக்கும் டென்னிஸில் முடிச்சு விழுந்தது.

- உதய தாரகை —

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

உச்சரிக்க முடியாது; உணர வேண்டும்.

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 21 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

1926 ஆம் ஆண்டு வெளிவந்த கார்ட்டூன் புத்தகம் தான் வின்னி த பூஃ என்பது. மனிதனின் குணாதிசயங்கள், பண்புகள் என்பவற்றைக் கொண்ட மிருகங்களின் புனைவுக் கதைகளாக இதனை கண்டு கொள்ள முடியும். இதன் தழுவல் நிலைப் படைப்புகள் 2000களிலும் திரைப்படங்களாகக் கூட எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டன.

ஆப்பிள் நிறுவனம் தனது iOS என்ற பணிசெயல் முறைமையில் iBooks ஐ அறிமுகப்படுத்திய போது, இந்த நூலை இலவசமாக தரவிறக்கம் செய்யும் சாத்தியத்தை வழங்கியது. ஸ்டீவ் ஜொப்ஸ் இதனை அறிமுகப்படுத்திய நிலையொரு கலை.

இந்தக் கதையாக்கத்தின் ஓட்டத்தில் நிறைய பாத்திரங்கள் வந்து சந்திக்கும். பூஃ என்பது ஒரு கரடி. அதன் நண்பர்களின் ஒருவர் தான் பிக்லட் என்பது மிகச் சிறிய இன்னொரு மிருகம். இது தன்னை வீரனாக உருவாக்க முயற்சிப்பதோடு தனது பயமெல்லாவற்றையும் தாண்டிய வாழ்வை நோக்கிய பயண வேட்கையோடும் காணப்படும்.

இந்தப் பாத்திரங்களிடையே இடம்பெறுகின்ற சம்பாஷணைகள் மிகவும் உணர்வு வலிமை நிறைந்தவை.

“அன்பை எப்படி உச்சரிப்பது?” என்று பிக்லட், பூஃவிடம் கேட்கும்.

“அது உச்சரிப்பதல்ல. உணர்ந்து கொள்வது” எனப் பதிலளிக்கும் பூஃ.

மனிதனின் அழகிய உணர்வுகளின் பயணத்தை வெளிப்படையாக இந்த மிருகங்களின் புனைவு பாத்திரங்களின் மூலம் எடுத்துத் செல்கின்ற A. A. Milne இன் கதை சொல்லும் பாணி — வியப்பு.

பண்டையக் காலத்தில் வாழ்ந்த நாட்டின் அரசனொருவன், மிகப்பெரிய ராஜசக்கரவர்த்தி ஆகிவிட வேண்டுமென்ற கனவோடு தினமும் வாழ்ந்து வந்தான்.

நாட்டின் அத்தனை விடயங்களையும் அடக்கியாள வேண்டுமென்கின்ற அவனின் வேட்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. இந்த நிலையை விரைவில் அடைந்து கொள்வதற்காய் நாட்டின் பிரபலமான ஞானியொருவரைச் சந்தித்து ஆசி பெறச் சென்றான்.

அரசன் சென்ற நேரத்தில், ஞானியோ தியானத்தில் திளைத்திருந்தார். கொஞ்சம் நேரம் காத்துக் கொண்டிருந்தான் அரசன். ஆனாலும், ஞானி, தியானத்தை நிறைவாக்கியதாகக் தெரியவில்லை.

இன்னும் கொஞ்ச நேரம் காத்துக் கொண்டிருந்தான். ஆனாலும் ஞானியின் தியானம் முடிந்த பாடில்லை.

“ஏ, நான் உலகத்தையே ஆள வேண்டுமென்ற வேட்கையில், அதற்காக உனது ஆசி பெறலாமென வந்தேன். நீ என்னுடன் கதைக்காமலா புறக்கணிக்கின்றாய்?” என்ற ஆவேசத்துடனும் கோபத்துடனும் ஞானியை நோக்கி அரசன் கத்திக் கொண்டு வெளியேற முற்பட்டான்.

திடீரென சுதாகரித்துக் கொண்ட ஞானி, “அரசே, உலகத்தை ஆள வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்கள். உங்களால் உங்களின் ஆத்திரத்தைக் கூட அடக்க முடியாமல் இருக்கும் போது, எப்படி பிறரை அடக்கி ஆளப் போகிறீர்கள்?” என்ற அமைதியாகச் சொன்னார்.

அரசன் அவ்விடத்திலிருந்து வாழ்வின் மீதான புதிய பார்வையுடன் வெளியே சென்றான்.

“உணரந்து கொள்கின்ற அனுபவ அறிவு நிலைகள் சொல்லித்தரும் பாடங்கள் மிக உயர்வானவை. எல்லோருக்கும் அவர்கள் சார்பான நிலையில் இந்தச் சம்பவத்தின் தாக்கமிருக்கும் — உணர்ந்து கொள்ளும் வலிமையிருக்கும்” என கோபாலு கடுமையாக நம்புகிறான்.

ஈற்றில் ஒரு புதிரையும் சொல்லச் சொன்னான், கீழ்வரும் படத்தில் ஆங்கில எழுத்தான O ஒன்று இருக்கிறதாம். அது எங்கிருக்கிறது என கண்டுபிடிக்கச் சொன்னான்.

- உதய தாரகை —

*இற்றைப்படுத்துகை (14.01.2012): குறித்த புதிரில் O என்ற எழுத்து ஒரு தடவையல்ல, நிறையத் தடவைகள் காணப்படுகின்றன. ஒரு O காணப்படுகிறது என்று நான் புதிரில் குறிப்பிட்டுள்ளதால், ஒரு O ஐக் கண்டவுடன் தேடல்களை நிறைவு செய்து, விடையை பலரும் மறுமொழியாகச் சொல்லியனுப்பி இருந்தனர். முக்கோணங்களைத் தாண்டியும் யோசிக்கப் பழக வேண்டுமென்பதைச் சொல்லவே (இதை Thinking out of the triangle என்று ஆங்கிலத்தில் சொல்லலாம். Box என்று சொல்ல விருப்பமில்லை. ;) ) இந்தப் புதிர் என கோபாலு சொல்லச் சொன்னான்.

கடிதத்திற்கான காத்திருப்பு

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 31 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

இது எப்போதும் இருந்ததில்லை. அடிக்கடியும் நடப்பதில்லை. எப்போதாவது நடக்கும். நடக்கும் போது, என்னை பிழிந்தெடுக்கும். இதிலென்ன வினோதம்?

காதலியிடமிருந்து கடிதமா? என்றால் இல்லை என்றுதான் பதில். அப்படியானால் யாரிடமிருந்து கடிதம்?

சிலவேளைகளில் அந்தக் கடிதத்தைப் பெற்றுக் கொள்வதற்கான எனது தேட்டம் ஒவ்வொரு நாளிகைகளிலும் என்னோடு பயணிக்கும். கடிதங்களோடான எனது உறவு என்பது ஒரு தொடர் கதை. பெரிய கதையும் கூட.

பாடசாலையில், வருத்தம் என்று சொல்லி வீடு செல்ல அனுமதி கேட்டு அதிபருக்கு எழுதிய கடிதம், கல்லூரி விடுதியிலிருந்து வீட்டிற்கு எழுதிய கடிதம், ஆசிரியரிடம் சுகம் விசாரித்து எழுதிய கடிதம், ஆக்கத்தை பிரசுரிக்க வேண்டி பத்திரிகைக்கு எழுதிய கடிதம் என கடிதங்களின் பாத்திரங்கள் ஏராளம்.

கல்லூரி விடுதியிலிருந்து பழைய பாடசாலை நண்பனுக்கு, பாடசாலை முகவரிக்கே கடிதம் எழுதிய நினைவுகளும் எனக்கிருக்கிறது. கடிதத்தை, பரிசு ஒன்று வந்ததாய் அவன் பார்ப்பதாய் சொல்வான். அழகான நினைவுகள் அவை.

கடிதம் — இப்போதெல்லாம் இதற்கு வேறு பெயர்கள், வேறு ஊடகங்கள். பேனாவைக் கொண்டு கடிதம் எழுதுபவர்கள் — ஏன் குறிப்பெழுதுபவர்கள் கூட குறைவுதான். இது பிழையல்ல.

பென்சிலிருந்து பேனாவிற்கு வந்த காலத்தில், பென்சிலை விட்டுவிட்டு பேனாவிற்கு மக்கள் கொடுத்த வரவேற்பையும் இப்படித்தான் உலகம் கண்டிருக்கும்.

நாம் வாழ்கின்ற காலத்திற்கு முன்பு வாழ்ந்தோர், தம் வாழ்நாளில் கண்டு வியந்தவைகள் பற்றிய விடயங்களை பகிர்கையில், எமக்கு அதன் பாலான வியப்பு புரிவதில்லை. அது எமக்கு பழையது. ஆனால், அவர்களுக்கோ அன்று அது ஆச்சரியம் தரும் புதிய விடயம்.

அதுபோலத்தான், ஒரு காலத்தின் வியப்புக்குரிய நிகழ்வு – இன்னொரு காலத்தின் இயல்புக்குரிய நிகழ்வு. இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இதை யதார்த்தமாக கண்டு கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

நீங்கள் பிறக்கும் போதிருந்த உலகத்தின் நிலை இன்றில்லை. என்றும் அது போலவும் இனி வராது.

இன்றளவில் கடிதங்களின் பிறப்புக்கான மூலங்களாக, இலத்திரனியல் கருவிகளின் விசைப்பலகைகள் மாறியிருக்கிறது. வேகமாக எல்லோராலும் எழுத முயற்சிக்க முடிகிறது. மொழிகள் கடந்தும் பலர் எழுதத் தொடங்கியிருக்கின்றனர்.

ஆனாலும், பேனாவினால் கடதாசியில் எழுதும் கடிதங்கள் மீதான காதல் அடியோடு ஒழிந்துவிட்டதாக கருதவியலாது. அப்படிக் கடிதங்களை காண்கின்ற வேளையில் ஒருவர் அடைகின்ற மகிழ்ச்சியின் அளவை அவர்களின் கண்களில் பலதடவை கண்டிருக்கிறேன்.

கடிதம் பெற்றுக்கொள்கின்ற நிலையில் தோன்றும் மகிழ்ச்சி மிகவும் அழகானதொன்று. கையால் எழுதாத கடிதங்களுக்குள்ளும் மகிழ்ச்சி பொதிந்த நிலைகள் உண்டென்பதை பல கடிதங்கள் சொல்லியிருக்கின்றன.

கடதாசியில் எழுதும் கடிதங்களாய், அண்மையில் எனக்கு வந்த மின்னஞ்சல்கள் சிலவும் அழகிய தமிழில் ஆனந்தம் சொறிந்தது. கடிதங்களை பொக்கிஷமாகக் காண்கின்ற உலகப் போக்கு எப்போதுமே இருந்தது. இருக்கும்.

உறவுமுறைக் கடிதங்கள் தொடங்கி உத்தியோகபூர்வ கடிதங்கள் வரை கடிதங்கள் சொல்கின்ற செய்திகளின் பரப்பு விசாலமானது. உலகப்புகழ் பெற்ற உத்வேகம் தரக்கூடிய கடிதங்களையும் நாம் கண்டுள்ளோம். ஆபிரிகாம் லிங்கன் தனது மகனின் வாத்தியாருக்கு எழுதிய கடிதம் உத்வேகத்தின் ஊற்று.

நான் பல நாட்கள் காத்திருப்பதும் ஒரு கடிதத்திற்குத் தான். அது இன்று வந்து ஆனந்தம் தந்தது.

கடிதங்கள் தரும் ஆனந்தத்தின் அளவு கூட, அதற்கான காத்திருப்பின் அளவிற்கு நேர்விகித சமனாகவே இருக்கிறது என்று நியூட்டன் எந்த விதியையும் உருவாக்கவில்லை. ஆனால், அதுதான் உண்மையென உணர்ந்து கொள்கிறேன்.

- உதய தாரகை —

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

இந்தப் பதிவை ஒலி வடிவில் கேட்க:


iTunes இல் நிறம் Podcast Niram Podcast

கெய் செரா செரா

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 39 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

வெவ்வேறு விடயங்கள் தோன்றுவதும் மறைவதும் பின்னர் மீண்டும் தோன்றுவதுமாய் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். இவ்வாறு தோன்றுகின்றவைகளில் சில நிலைத்து நிற்கும், சில மறைந்து போகும், இன்னும் சிலவோ, இந்த 2011 வருடம் போல் திரும்ப வரவே வராது.

மீண்டும் வராத 2010 ஆம் ஆண்டு பற்றி நிறத்தில் சொல்லியது நேற்று போல் தோன்றுகிறது. வேகமாய் விரைந்தோடிவிட்ட பன்னிரண்டு மாதங்கள் விட்டுச் சென்ற நினைவுகளை நினைத்துப் பார்க்கிறேன்.

எண்ணங்களால் வசந்தமான பல மாற்றங்கள், கடந்து போகின்ற ஆண்டில் அரங்கேறிய அழகைக் கண்டு மகிழ்கிறேன்.

கடந்து செல்கின்ற ஆண்டில், சந்திக்க வேண்டுமென கனவு கண்ட பலரையும் இன்னும் பல்வேறு துறைகளில் தங்களை நிலை நிறுத்திய பலரையும் சந்தித்து அவர்களது அனுபவங்களோடு பயணிக்கின்ற வாய்ப்புக் கிட்டியது.

புரிந்துகொள்கின்ற ஆத்மாக்களின் இணைப்புக் கிடைத்தலின் அனுபவம் புரிந்து கொள்ளப் படலாம் — புரியவைக்க முடியாது.

மகிழ்ச்சி, அதிர்ச்சி, சோகம், கவலை, வெறுப்பு, காத்திருப்பு, பரிவு, பச்சாதாபம் என ஒவ்வொரு நிமிடமும் வழங்கிய ஆயிரம் உணர்வுகளை எனது அனுபவங்களின் அத்தியாயங்களுக்குள் அடக்கிக் கொள்கிறேன்.

அடுத்த நிமிடம் மறைத்து வைத்திருக்கும் ஆச்சரியங்களின் வெளிப்பாடுதான், அனுபவங்களின் அத்தியாயங்களை பலவேளைகளில் நிரப்பி விடுகின்ற உண்மையும் எனக்குப் புரிகிறது.

பிரபல நடிகையும் பாடகியுமான Doris Day இன் பாடலொன்று, எதிர்காலம் எவ்வாறிருக்குமென காண்பதற்கு அது எமதுடையதல்ல என்ற பொருள்படும் வகையில் அமைந்திருக்கும்.

Que Sera Sera — கெய் செரா செரா. எது எப்படி உருவாகுமோ, அது அப்படியே உருவாகும். அந்தப் பாடலைக் காண்க.

.

அடுத்த ஆண்டு கொண்டுதரப் போகும், ஆச்சரியங்கள் பற்றிய பட்டியல் யாரிடமும் இல்லை. அடுத்த நிமிடத்தின் அழகிய நிலை, இந்த நிமிடத்தின் அறுவடையில் தான் இருக்கிறது.

இந்த நிமிடமே எல்லாமும் ஆகிறது.

பிரபல பாடலாசிரியரும் இசையமைப்பாளருமான Woody Guthrie, 1942 இல், அடுத்த ஆண்டில் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென எண்ணினாரோ அவற்றையெல்லாம் புத்தாண்டு தீர்மானங்களாக பட்டியற்படுத்தியிருந்தார்.

அந்த பொக்கிஷமான புத்தாண்டு தீர்மானப் பட்டியலின் பிரதி இணையத்தில் வெளியாகியது. பட்டியலில் காணப்படும் தீர்மானங்கள் இன்றும் பொருந்தும் வகையில் நாமெல்லோரும் ஒவ்வொரு நாளும் செய்யக்கூடிய விடயங்களைக் கொண்டிருப்பது — ஆச்சரியம்.

காலங்கள் கடந்தும், காலத்தால் அழியாத விடயங்களைத் தர முடிகின்ற கலைஞர்கள் பற்றிய நினைவு எப்போதும் எனக்கு வியப்பையும் பூரிப்பையும் தருவதுண்டு. பாரதியும் காலத்தால் அழியாத காவியம் செய்தவன் என்பேன்.

Woody Guthrie இன் பட்டியல் உங்கள் பார்வைக்காக:

நிறைய நல்ல நூல்கள் படிக்கலாம், நம்பிக்கையோடு இருக்கலாம், கனவுகளோடு கதை செய்யலாம், மனதை திடப்படுத்திக் கொள்ளலாம், எல்லோரிடமும் அன்பு காட்டலாம், மக்களைப் புரிந்து கொள்ளலாம் ஏன் பற்தீட்டி குளிக்கலாம். இந்த நிமிடத்திற்கு அழகு சேர்ப்பதென்பது நாம் தேர்ந்தெடுக்கும் அர்த்தமுள்ள செயல்களிலேயே தங்கியுள்ளது. தேர்ந்தெடுத்தல் உங்கள் கைகளில்.

“நிமிடங்கள் பல சேர்ந்தே வருடமொன்றாகிறது என்பதை நான்தான் சொல்ல வேண்டுமா?” என்று கோபாலு கேட்கிறான்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

- உதய தாரகை —

  • Que Sera Sera என்பது ஸ்பானிய மொழியிலமைந்த வாக்கியமாகும். Whatever will be, will be என்பதே அதன் ஆங்கில அர்த்தமாகும்.
  • 1956 இல் வெளியான அல்பிரட் கிட்ஸ்கொக்கின் The Man Who Knew Too Much என்ற திரைப்படத்தில் Que Sera Sera என்ற பாடல் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • Woody Guthrie இன் புத்தாண்டு தீர்மானப் பட்டியலின் நிழற்பட மூலம்: List Of Note

பத்தாயிரம் மணிநேர விதி

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடமும் 47 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

கடந்த ஜுலை மாதம் ஸ்கொட்லாந்தில் இடம்பெற்ற TED Global 2011 மாநாட்டில், TED மொழி இணைப்பாளராக நான் கலந்து கொண்டேன். அங்கு பல ஆளுமைகளைச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.

பலதுறைகளிலும் முன்னணியாக விளங்குகின்ற ஆளுமைகளுடனான சந்திப்பு, பல விடயங்களைச் சொல்லித் தந்தது. அவை பற்றியெல்லாம் விரிவாக வெவ்வேறு பதிவுகளில் சொல்லவிருக்கிறேன்.

அந்த மாநாட்டில் நான் சந்திந்த பல ஆளுமைகளுள் ஒருவர்தான் — எழுத்தாளர் மல்கம் கிலாட்வெல் (Malcolm Gladwell). 2005 ஆம் ஆண்டு TIME சஞ்சிகையின் உலகில் செல்வாக்குச் செலுத்தும் 100 பேர் பட்டியலில் இடம்பிடித்தவர். The Tipping Point, Blink மற்றும் Outliers போன்ற பல பிரபல்யமான நூல்களின் ஆசிரியர்.

பத்தாயிரம் மணிநேர விதி என்றவுடனேயே, இவரே அனைவராலும் நினைவுகளோடு தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகின்றார். தனது Outliers என்ற நூலின் மூலம் இந்த விதி தொடர்பாக சொல்லியிருப்பார்.

ஒருவர், ஒரு சிக்கலான திறனில் நிபுணத்துவம் பெற்றவராவதற்கு, அந்தத் திறனை பயிற்சி செய்வதற்காக அதனையே குறித்தான பத்தாயிரம் மணிநேர பயிற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டுமென்பதுதான் — அந்த விதி.

ஒவ்வொரு நாளும் 2 தொடக்கம் 3 மணிநேரம் தான் நிபுணத்துவம் அடைய வேண்டுமென எண்ணுகின்ற விடயத்தில் 10 வருடங்களுக்கு பயிற்சி எடுத்தால் ஒருவன் அவன் விரும்புகின்ற துறையில் நிபுணத்துவம் அடைகின்றான் என்பதே இதன் இன்னொரு வடிவம்.

பல ஆதார சம்பவங்களோடு தனது அவதானங்களை கிலாட்வெல் அந்த நூலில் விபரிப்பார்.

ஆனாலும், இந்த பத்தாயிரம் மணிநேர விதி, பலராலும் வித்தியாசமான கருத்தோடு உணரப்பட்டுள்ளதும் உண்மை. “நிபுணராவதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் வெறும் பத்தாயிரம் மணிநேரம் பயிற்சி செய்வதுதான்” என்பதுதான் அந்தக் கருத்து.

வெறும் பத்தாயிரம் மணிநேரங்கள், எதைத் தரமுடியும்? வெறுமையைத் தவிர.

விரும்பிய திறனில் ஒன்றிப்போய், அதுபற்றியதாய் எமது பயிற்சிகள் பத்தாயிரம் மணிநேரமாவது இருக்க வேண்டுமென்பதையே இந்த விதி சொல்கிறது. பத்தாண்டுகள் தான் தேவைப்படும் என்றில்லை — ஒன்றித்த பயிற்சியுடனான பல மணித்தியாலங்களை ஒரு நாளில் உங்களால் பயிற்சிக்காக தர முடிந்தால், ஒரு சில ஆண்டுகளிலேயே விற்பன்னர் ஆகிடலாம்.

திறமை அல்லது ஆற்றல் என்பது தோன்றி விசாலமாக்கபடுவதில் பயிற்சி, பொறுமை, தொழில்நுணுக்கங்கள் என பல காரணிகள் பங்காற்றும் என்பதும் நாம் அறிந்ததே!

மணித்தியாலங்களை எண்ணிக் கொண்டு பயிற்சி செய்வதாலோ, நிபுணத்துவம் கிட்டாது என்பதையும் நாம் உணர வேண்டியுள்ளது. ஒன்றித்த பயிற்சியில் மணித்தியாலக் கணக்கு தெரியாது — நாம் பயிற்சி செய்யும் விடயம் எதுவோ அது மட்டுமே கவனத்தில் நிற்கும்.

இந்த விதி வலியுறுத்துவதெல்லாம் பயிற்சி செய்வதனால் பலன்கள் கிடைக்கின்றது என்பதைத்தான்.

ஆனால், நிபுணர்கள் என்பவர்கள் யாவர்?

இசையில் விற்பன்னராக நினைத்து, இசையமைப்பாளர்கள் எவ்வாறு இசையமைக்கிறார்கள் என்றுணர்ந்து அதன்படி வெளிப்படுத்த எண்ணுதல், எழுத்தில் வித்தைகள் செய்ய எண்ணி எழுத்தாளர்கள் எப்படியெல்லாம் வித்தைகள் செய்கிறார்கள் என அதன்படி வெளியிட பயில்தல், சித்திரக் கலைஞனாகி சிகரங்கள் தொட மற்ற சித்திரக் கலைஞர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதையறிந்து முயல்தல் என்பதிலேயே பலரினதும் பயிற்சிகள் வரையறுக்கப்பட்டிருக்கிறது.

இந்த ‘முயற்சிகள்’ ஒருபோதும் நிபுணராவதற்கான வாய்ப்பை வழங்காது. அசலின் இன்னொரு நகலொன்றை மட்டுமே தரும்.

கலையையோ, திறனையோ தனக்கேயுரித்தான பாணியில் சொல்லத் தெரிந்தவன் தான் நிபுணராகின்றான்.

தன்னைத் தானாகவே காட்டிக் கொள்கின்ற வித்தைகளைத் தான் நிபுணன் பயிற்சியாகப் பெறுகிறான் என்றே உணர வேண்டியுள்ளது. இது சொல்லிவிடுவது போல் லேசானதல்ல. மனதோடு ஒருமித்த பயிற்சிகள் நிறையத் தேவைப்படுகிறது.

தனது கருதுகோள்கள் பற்றிய தெளிவை புரிகின்ற வகையில் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல்தான் ஒருவனை ஒரு துறைசார்பான தெளிவுள்ளவனாகக் காட்டுகிறது.

“எனக்கிட்ட இருந்து அவங்க இதைத்தான் எதிர்பாக்கிறாங்க. அதத்தான் நான் செய்யனும்” என்றவாறான தொனியில்தான் நிறைய முயற்சிகளின் தொடக்கம் இன்றளவில் இருக்கிறது. இங்கு தன்னைத் தானாக காட்டுவதற்கான தெளிவின் துவக்கம் தேவைப்படுகிறது.

மற்ற விடயங்கள், மனிதர்களின் எண்ணங்கள் சார்பான ஆதிக்கமே எமது எண்ணங்களின் வெளிப்பாட்டின் பூட்டாகவிருக்கிறது. ஆனால், சாவி எம்மிடம் இருப்பது என்பது மகிழ்ச்சியான செய்திதான்.

எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், அனைவரும் “இது புதிசா இருக்கே!” என்றவாறான திகைப்பைத் தரக்கூடிய சந்தர்ப்பங்கள் நாளுக்கு நாள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்த ஆச்சரியங்களை உருவாக்குபவர்கள்: நேரத்தை பயிற்சிகளால் அலங்கரித்து தன்னைத் தானாகவே காட்டிக் கொண்டவர்கள்.

நேரத்தை பயிற்சியில் முதலீடு செய்து தங்களைத் தயார்படுத்திக் கொண்டவர்கள் – அதிர்ஷ்டசாலிகள். செனகா என்ற உரோம தத்துவஞானி, “தயார்படுத்தல், வாய்ப்பைச் சந்திக்கும் நிலையைத்தான், அதிர்ஷ்டம் என்கிறோம்” என்று ஒரு தடவை சொல்லியிருப்பார்.

தன்னைத் தானாக வெளிப்படுத்தினால், வாய்ப்புகளுக்கு உங்களை வந்து சேரும் நிறைய வாய்ப்புகள் பிறக்கும். இங்கு அசலுக்கு நிறைய மௌசு உள்ளது எல்லோருக்கும் தெரியும்.

எழுத்தாளர் கிரிஸ்டின் ஆம்ஸ்ட்ரோங் சொன்ன ஒரு விடயத்தை பகிர்தல் பலன் தரும் என நினைத்து இங்கு இணைக்கிறேன்.

“நீங்கள் பேசிக் கொண்டிருந்த ஆனால் எப்போதுமே செய்யாத அந்த விடயங்களைச் செய்யுங்கள். எப்போது விட்டுவிடுவது, எப்போது கட்டிக் காப்பது என்பதைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். அவசரம் வேண்டாமே! அது அதைப் போன்றுதான் இருக்கிறது என்ற சொல்லாடலுக்கான வாய்ப்புக்களை உருவாக்க வேண்டாம். எடுத்ததற்கெல்லாம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கவும் வேண்டாம்.

முடியாது என்று சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள் — உங்கள் ‘முடியும்’ என்ற வார்த்தைக்கு அப்போது கவர்ச்சி கிடைக்கும்.

முன்னேற்றத்தில் பங்காயுள்ள நண்பர்களோடு பழகுங்கள், குழிதோண்டும் மற்றவர்களோடான அணுக்கம் தேவையில்லை. நீங்கள் செய்வதில் ஆர்வமாக இருங்கள். மற்றவர்களுக்கு ஆர்வமாக உங்களைத் தோற்றுவிக்கின்ற பாசாங்கு வேண்டாம். உங்கள் சுதந்திரத்தை மதிக்கும் வகையில் முதிர்ச்சியடைந்திருங்கள். அந்தச் சுதந்திரத்தை அனுபவிக்கும் வகையில் இளமையாயிருங்கள். ஈற்றில், நீங்கள் யாரோ அதுவாகவே இருங்கள்.”

குறுக்கிட்ட கோபாலு இப்படிக் சொல்கிறான், “அப்படி, இப்படி என வரவேண்டும் என்று முயற்சிப்பதை விட்டுவிட்டு, எதுவாக நீயாக வேண்டுமோ, அதையே முயற்சிக்காமல் – செய். நீ செய்வதில் தோற்றால்தான், செய்தது முயற்சி. முயற்சியில் தோற்றதை என்னவென்று சொல்வது? ஆக, எதைச் செய்ய எண்ணுகிறாயோ அதை முயற்சிக்காமல் உடனே செய்! – செய்வது தோற்றுப் போனால், அது தன்னாலே முயற்சியாகும்.”

- உதய தாரகை —

  • பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.
  • TED Global 2011 இல் மல்கம் கிலாட்வெல் வழங்கிய சொற்பொழிவு வெளியிடப்பட்டுள்ளது. TED.com இல் காணலாம்.
  • Outliers நூலில் சொல்லப்படுகின்ற இந்த விதி பற்றிய விடயத்தை சுருக்கமாக ஒருவர் காணொளியாக உருவாக்கி இருக்கிறார். YouTube இல் அதனைக் காணலாம்.

எங்கே உனது கதை?

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 17 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

“கண்ணா, நீயொருத்தன் தான் இதைப் பண்ற. இதனால நீ ஒன்னும் பெரிசா கிழிக்கப் போறதில்ல. ட்றை கூட பண்ணாம பேசாம கம்மென இருந்திடு. ஆமா, சொல்லிட்டன்.” — அடிக்கடி நம்மையறியாமலேயே நமக்குள் நாமே கேட்கின்ற ஒலிகள்.

“யாருதான் இதைச் சொல்றது?” என்று நீங்கள் கேட்டு விடை கண்டதுண்டா?

அது யாருமல்ல — அவன் பெயர் தான் பயம்.

வாழ்க்கையில் பயம் எடுத்துக் கொண்டுள்ள பாத்திரம் — வில்லன். ஹீரோவான நீங்கள் எப்படியாவது அவனை வென்று, அவனை உங்கள் ஏரியாவுக்குள்ளேயே வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பயமில்லாமல் — பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல என்ற அளவில் செயற்படுகின்றவர்களை கண்டாலே அவர்கள் சார்பான எமது மதிப்பு கொஞ்சம் அதிகரிக்கும்.

நிலவிற்கு ஏகி அங்கு பவனி வந்தவர்கள். சூறாவளிகளைத் தாண்டியும் சுழன்று சென்றவர்கள். ஆகாயத்தில் நர்த்தனம் ஆடியோர். சுனாமிக்கே ஜுஜுபி சொன்னவர்கள்.

ஆயிரம் பேருக்கு முன்னால் நின்று தனது அழகான கருத்தை எடுத்தியம்பியோர். புற்றுநோய்க்கெதிராக நின்று வாழ்க்கையை வெல்ல முயல்வோர். ஆதரவற்ற குழந்தைகளை தன் குழந்தைகளாகப் பார்த்து வளர்க்க தத்தெடுப்போர்கள் என தமது நடவடிக்கைகளால் எம்மைக் கவரும் ஆயிரம் வகையான மக்கள் கூட்டத்தை அடுக்கிச் சொல்லிவிடலாம்.

ஏன் இவர்கள் எமது மனத்தை கவர்கின்றார்கள்? ஏனெனில், நாமும், எமது ஆழமான சிந்தையில் அவர்களாகவே இருக்கிறோம்.

நாம் யாவரும் அசலான மனிதர்கள் தாம். நிறைய குணாதியசங்களை ஒரே போன்றதாகவே கொண்டு வாழ்வின் சுழற்சியில் பயணிக்கிறோம்.

எவ்வளவுதான் எம்மிடையே கலாசார, சமூக வேறுபாடுகள் காணப்பட்ட போதும், அந்த அத்தனை வேறுபாடுகளுடைனையே நாம் ஒன்றாகவிருக்கிறோம் என்றே நான் நம்புகிறேன்.

பயம் உங்களை விட்டு அகன்று செல்லும் வரையில், (அது முற்றிலுமாக ஒருபோதும் எம்மை விட்டு செல்லாது என்ற உண்மையையும் நாம் உணர வேண்டும்) தைரியத்தோடு இருக்க உங்களைப் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த நிலையில் மற்றவர்களை கவர்ந்து அவர்கள் நேசிக்கும் இன்னொரு ஆளுமையாக நீங்கள் உருவாக்கம் பெற வழி தோன்றும்.

உலகம் முழுமை பெறுவதற்காக உங்கள் கதை நிச்சயமாகத் தேவைப்படுகிறது. எங்கே உங்கள் கதை?

“உங்களின் கதையை எப்போது உலகோடு பகிர்ந்து கொண்டு, உலகின் முழுமைக்கு உயிர் கொடுக்கப் போகிறீர்கள்?” என்று கோபாலு கேட்கச் சொன்னான்.

Permission to Speak Freely என்ற நூலின் ஆசிரியையான, ஆன் ஜெக்ஸன் தனது வாழ்வியலின் இக்கட்டான நிலைமைகளைத் தாண்டி எவ்வாறு தனது சுதந்திரமான வாழ்வினை உருவாக்கித் தக்க வைத்துக் கொண்டார் என்பதை குறித்த அவரின் புத்தகத்திலேயே இன்னும் பலரினதும் அனுபவங்களோடு அழகாக விபரிப்பார்.

செத் கொடினின் வேண்டுகோளிற்கு ஏற்ப, “இன்று எது முக்கியமானது?” என்ற கேள்விக்கு அவர் பதிலளித்த விடயத்தை பகிர்ந்து கொள்ளலாமென்ற எண்ணம் தோன்றியது — இந்தப் பதிவு உருவாக்கம் பெற்றது.

- உதய தாரகை —

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

மரமேறும் மீன்கள்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 36 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

“வாகை சூட வா” என்ற படத்தில் ஓர் அற்புதமான பாட்டு வரும். “சர சர சார காத்து வீசும் போதும்..” — சின்மயி உன்னதமாகப் பாடியிருப்பார்.

இந்தப் பாடல் திரையில் தோன்றுகின்ற நிலையில் படத்தின் காட்சியமைப்புகள் பிரமாதமாகவும் எளிமையாகவும் ஆக்கப்பட்டிருக்கும்.

ஒரு கட்டத்தில் காட்சிப்புலத்தில், மழைகால வெள்ளத்தில் அடிபட்டு ஊருக்குள் வருகின்ற குளத்து மீன்கள் மரத்தில் ஏற முற்படுகின்றதும் அது முடியாமல் போய் கீழே விழுகின்றதுமான காட்சிகள் காட்டப்படும். கிராமிய சூழலின் பிரிக்கமுடியாத அற்புதமான பண்புகளை திரைக்குள் பார்க்க முடியும்.

பாடசாலையில் கரைச்சல் தந்து கொண்டிருந்த அந்தக் கட்டிளம் வயது பையனுக்கு தேவைப்பட்டதெல்லாம் ஆதரவும் அரவணைப்பும் அறிவுரைகளும் தான். பாடசாலையில் அழகாய் அறிவுரை சொல்வதில் அனுபவமுள்ள ஆசான் மயில்வாகனத்திடம் அவன் அனுப்பி வைக்கப்பட்டான்.

இந்தப் பையன், பாடசாலையில் பல தடவைகள் நடந்து கொண்டுள்ள விதம் அவனை புனர்வாழ்வு மையத்திற்கேனும் அனுப்பித் திருத்தி எடுக்க வேண்டுமென்பதாய் பலரையும் எத்தி நின்றது.

நிறையப் பேர் அவனோடு, அவன் குணம் சார்பாகக் கதைத்து அறிவுரை பலவும் சொல்லியிருந்தனர். ஆனால், அவனை மயில்வாகனம் சார் இதுவரையில் சந்திக்கவில்லை.

“நீ, குழப்படி செய்யாத, தொந்தரவுக்குள் மாட்டிக் கொள்ளாத ஏதாவது வகுப்புகள் உண்டா?,” அந்தப் பையனிடம் மயில்வாகனம் கேட்டார்.

“நான் மைதிலி டீச்சரின் வகுப்பில் குழப்படி அதிகம் செய்வதில்லை” என்றான் அந்தப் பையன்.

“அப்படி மைதிலி டீச்சரின் வகுப்பில் என்ன வித்தியாசமிருக்கிறது?” என்று கேட்ட மயில்வாகனத்திற்குக் கிடைத்த பதில்கள் பல விடயங்களைச் சொல்லின.

“மைதிலி டீச்சர், என்னை அன்போடு வகுப்பிற்குள் வரவேற்பார். அவர் தருகின்ற பாடம் எனக்கு நன்றாக புரிகின்றதா என்பதை கவனிப்பார். எனக்குச் செய்யக் கூடியதான பாட அப்பியாசங்களையே மட்டுமே அவர் எனக்குத் தருவார்” என்று அந்தப் பையன் வித்தியாசங்களை அடுக்கிக் கொண்டிருந்தான்.

மேற்சொன்னவற்றில் ஒன்றைத் தானும் வேறு எந்த ஆசிரியரும் செய்வதில்லை என்பதையும் அவன் சொல்லிய பதில் சுட்டி நின்றது.

மற்ற ஆசிரியர்களை அணுகி, இந்த விடயங்களை தங்களின் பாடவேளைகளில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென மயில்வாகனம் சார் பரிந்துரைக்கின்றார். அவர்களும் அப்படியே செய்ய, என்ன ஆச்சரியம், அந்தப் பையன் குழப்படி ஏதும் செய்யாமல் பாடத்தில் கவனிக்க ஆரம்பிக்கின்றான்.

எதுவெல்லாம் வேலை செய்யவில்லை என்பதை அவதானிப்பதாகவே நாம் வளர்க்கப்படுகிறோம். முறைப்பாடு செய்வதிலும் முழுக் கவனம் செலுத்துகிறோம். ஆனால், “இன்று எது செயற்படுகின்றது? அதனை எவ்வாறு மேம்படுத்தி நன்றாகச் செயற்படுத்தலாம்?” என்பது பற்றிய புரிதல்கள் கொண்டவர்களாய் உருவாதலின் அழகியலை பலவேளை மறந்து விடுகிறோம்.

உங்கள் வாழ்க்கையில், வேலைத்தளத்தில் ஏன் வீட்டில் பல விடயங்களை மாற்றிக் கொள்ள நீங்கள் நினைத்து முயன்றிருப்பீர்கள். எது வேலை செய்யவில்லை என்பதைப் பற்றி எண்ணி, வேதனையை விலை கொடுத்து வாங்காமல், எது வேலை செய்கிறது, அதனை எப்படி மேம்படுத்தலாம் என்பதை அவதானித்து காரியம் செய்தலே, அழகிய மாற்றத்திற்கான ஒரேயொரு வழி.

Made to Stick என்ற நூலின் ஆசிரியர்களான ஸிப் மற்றும் டான் ஆகியோர் மாற்றம் பற்றிச் சொன்ன ஒரு விடயத்தை நிறத்தின் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணமே, இந்தப் பதிவாக உருவாயிற்று.

“எல்லோரும் மேதைகள் தாம். மீனொன்றின் ஆற்றலை அது மரத்தில் ஏறும் திறமையை வைத்து கணிப்பீடுவீர்களாயின், அந்த மீன் வாழ்நாள் முழுவதும் தன்னை முட்டாளென்றே எண்ணிக் கொள்ளும்” என்ற ஐன்ஸ்டைனின், அமுதவாக்கும் மேற்சொன்ன விடயத்திற்கு இன்னும் பலம் சேர்க்கும்.

- உதய தாரகை —

Follow

Get every new post delivered to your Inbox.

Join 520 other followers