சாத்தியமற்ற சாத்தியங்கள்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 37 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

இயல்பான வாழ்க்கையின் பாதையாக இருப்பது, சாத்தியமான விடயங்கள் — சாத்தியமான விடயங்களை மட்டும் செய்தல் சாதாரண வாழ்வு பற்றிய அடிப்படையையே தரும் என அதை இன்னொரு வகையில் சொல்லலாம்.

இது உண்மையாகும். சாதாரண வாழ்க்கை என்பது எல்லோராலும் எய்திக் கொள்ள முடியும். தனித்துவமானவர்கள் என்ற பிறவியின் அழகிய தன்மையை இது ஒழித்துவிடுகிறது.

கொஞ்சம் நாம் சேர்ந்து சிந்திப்போம். ஆளியொன்றை அழுத்துவதால் மின்குமிழ் ஒளிரும் என்பது சாத்தியமற்றது. நிலவில் நடந்து செல்லுவது சாத்தியமற்றது. வானத்தில் இரும்பைப் பறக்கவிடுவது சாத்தியமற்றது. தூரதேசத்தில் இருக்கும் உறவை, கணினித் திரையில் காண்பது சாத்தியமற்றது. இந்தப் பதிவை நீங்கள் உங்கள் கணினியிலோ அல்லது திறன்பேசியிலோ வாசிப்பது சாத்தியமற்றது.

ஒரு கோபுரத்தின் உச்சியிலிருந்து கயிற்றின் மேலாக நடந்து இன்னொரு கோபுரத்தின் உச்சிக்கு செல்வது சாத்தியமற்றது. விமானம் போல், ஒருமனிதன் பறந்துவிடுவது சாத்தியமற்றது. இப்படி சாத்தியமில்லாத பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், இவை யாவும் இவை சாத்தியமாகிவிட முன்னர் மட்டுந்தான் சாத்தியமற்றதாய் இருந்தன.

உங்கள் வாழ்க்கையின் அழகியலை உங்களால் ஒவ்வொரு நிமிடத்தின் இருப்பிலும் பெற்றுக் கொள்ள முடியாவிட்டால், அதில் என்ன அர்த்தமிருக்கிறது?

உலகம் தானாக உருவாக்கிக் கொண்ட “சாத்தியமற்றவைகளின் பட்டியல்” பற்றி இங்கு அதிகமானோருக்கு ஆர்வமிருக்கிறது. அடுத்த கணத்தின் ஆச்சரியத்தை அனுபவிக்க மறந்து போகிறார்கள்.

இடர்களின் நிகழ்வின் மிச்சத்தில் தான் அசாத்தியங்கள், சாத்தியங்களாய் உருவெடுக்கின்றன. இடர்கள் சந்திக்கக்கூடாது என்ற வரையறைக்குள் தங்களை ஆக்குபவர்களின் அடிப்படையில் — “யாரோ சொன்ன சாத்தியமற்ற விடயங்களின் பட்டியல்” ஆதிக்கம் செலுத்துவது கவலை.

“உன்னால் முடியாது என்று யாரும் உன்னிடம் சொல்லிவிட வைக்காதே! — நானாகவிருந்தாலும் பரவாயில்லை. உன்னிடம் கனவிருக்கிறது. நீ அதைக் காக்க வேண்டும். முடியாதவர்கள் அவர்களால் முடியாததை உன்னாலும் முடியாது என்று சொல்லுவார்கள். உனக்கு எது வேண்டுமோ, அதை நீயே போய் எடுத்துக் கொள். அவ்வளவுதான்” — Pursuit of HappYness என்ற திரைக்காவியத்தில் வரும் ஒரு காட்சியில் வில் சிமித் தன் மகனுக்கு சொல்லும் வரிகள்.

அசாத்தியங்களின் சாத்தியமான தன்மை ஒரு தனிமனிதனின் மனப்பாங்கின் ஆழத்தின் நிலையில் அர்த்தம் கொள்கிறது.

அடுத்த நிமிடம் இதுதான் நடக்குமென தெரிந்திருக்கும் நிலையாக வாழ்க்கையிருக்கிறதென கற்பனை செய்து கொள்ளுங்கள். எல்லாமே கைவிரல் நுனியில் — வாழ்க்கையின் அடுத்த நிமிடத்தை சொல்லிவிடலாம். ஒரு சவாலில்லை. ஒரு இடர் இல்லை. நேற்றும் ஒன்றுதான். நாளையும் ஒன்றுதான். இன்றும் நேற்றையதன் பிரதிதான். எண்ணும் போதே சுவாரஸியம் தொலைந்துவிட்ட நிலை தெரிகிறதே!

நிறையப் பேரின் இன்று, நேற்றையதின் பிரதியாக இருப்பது இன்றும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

சவால்களை சந்திப்பது, அதனை உத்வேகமாய் ஏற்பது, ஊக்கங் கொள்வது என எல்லாமே மனிதனின் அடிப்படை இயல்புகள் தாம்.

அல்பர்ட் ஐன்ஸ்டைன் சொன்ன விடயத்தை கோபாலு ஞாபகமூட்டுகிறான். “என்னைப் பொருத்தவரையில், வாழ்க்கையில் வாழ்வதற்கு உங்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, அற்புதங்கள் எதுவுமேயில்லை என எண்ணி வாழ்வது. மற்றையது, இருப்பதெல்லாம் அற்புதங்கள் என எண்ணி வாழ்வது.”

அற்புதங்களுக்கு இடந்தருவதென்பது, அசாத்தியங்களோடு ஐக்கியமாவது என்பதாகும் — அவ்வகையில் அவை யாவும் சாத்தியங்களாக மாறிவிடும்.

மனிதனுக்கு முன்னேற வேண்டுமென்ற விருப்பம், அசாத்தியங்களை சாத்தியங்களாக்குகின்ற தேட்டம் இல்லாது போயிருந்தால் நாம் எல்லோரும் இன்னும் குகைகளில்தான் வாழ்ந்து கொண்டிருப்போம்.

- உதய தாரகை

மறுமொழி சொல்லி ட்விட்டரில் தொடர —

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

ஒட்டாத பசை

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 17 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

வரலாறு சொல்கின்ற பல விடயங்கள் ஆச்சரியத்தின் ஆதாரங்களாக இருப்பதுண்டு. கண்டுபிடிப்புகள் பல எண்ணங்களின் வித்தியாசமான அணுகுகையால் உண்மையான விடயங்களாகப் பரிவர்த்தனை செய்யப்பட்டதும் வரலாற்றின் அத்தியாயங்கள்.

அப்படியான வரலாற்றின் அத்தியாயமொன்றை பகிர்ந்து கொள்கிறேன்.

ஆதர் ப்ரை — 3M என்ற நிறுவனத்தின் கடதாசிப் பிரிவில் பொறியியலாளராக பணி செய்தார். 1974 இன் குளிர்காலத்தில் பசைகளைப் பற்றிய உருவாக்கத்தில் ஈடுபட்ட செல்டன் சில்வர் என்ற பொறியிலாளர் வழங்கிய உரையைக் கேட்பதற்காகச் சென்றிருந்தார். சில்வர், மிகவும் வலிமையற்ற பசையொன்றை உருவாக்கி அது பற்றி உரையைக் கேட்க வந்தவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவரால் உருவாக்கப்பட்ட பசையால், இரண்டு கடதாசிகளைக் கூட இறுக்கமாக ஒட்டிக் கொண்டிருக்கும் வகையில் செய்ய முடியவில்லை. அறையில் இருந்த அனைவர் போலவும், ப்ரையும் பொறுமையாக சில்வரின் உரையைச் செவிசாய்த்துக் கொண்டிருந்தார்.

யாராலும், குறித்த வலிமையில்லாப் பசையை உபயோகப்படுத்திக் கொள்வதற்கான பிரயோக நிலை அவதானிப்புகளை எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை.

“ஒட்டாத பசையால் அப்படி என்னதான் பண்ணிவிட முடியும்?” — கேட்கப்படாமலே அனைவரினதும் மனதில் தோன்றிய வினா.

ஆனால், ஒரு ஞாயிற்றுக் கிழமை, ப்ரையின் எண்ணங்களுக்குள் இந்த ஒட்டாத பசை வித்தியாசமான வகையில் ஒட்டிக் கொண்டது.

தேவாலயத்தில் ஆராதனைப் பாடல்களைப் பாடிய ப்ரை — தான் பாடவேண்டிய பாடல் காணப்படுகின்ற பக்கத்தை அடையாளப்படுத்தி வைக்க சின்னதொரு கடதாசியை புத்தகக் குறியாகப் பயன்படுத்தினார். ஆனால், துரதிஷ்டவசமாக அந்தக் கடதாசி இருந்த இடத்தை விட்டு அடிக்கடி விழுந்து கொண்டேயிருந்தது.

ஆராதனைப் பாடல்களுள்ள பக்கத்தை குறித்து வைத்துக் கொள்கின்ற வேலையை அது செய்ய மறுத்தது போல் தோன்றியதால், புத்தகம் பூராக ப்ரை பாடலை தொடர்ச்சியாகத் தேடிப் பாடிக் கொள்ள வேண்டியதாகியது.

அதுவொரு கட்டாயமாகத் திணிக்கப்பட்ட தீர்க்கப்படமுடியாத பிரச்சனையாகவே ப்ரைக்குத் தோன்றியது.

இப்படி ஆராதனைகளில் ஈடுபட்டிருந்த ப்ரைக்கு அட்டாகாசமான எண்ணமொன்று உதித்தது. ஒட்டாத பசையைக் கொண்டு, மீளப்பயன்படுத்தக்கூடிய புத்தகக் குறிகளை உண்டாக்கலாம் என எண்ணலானார்.

அந்தப் பசையின் ஒட்டுகின்ற வலிமை குறைந்து காணப்படுவதால், புத்தகத்தின் பக்கத்தில் அதனைக் கொண்டு சின்னக்கடதாசியொன்றை ஒட்டலாம். ஒட்டிய கடதாசியை அகற்றுகையில், அது ஒட்டிய பக்கத்தையும் கிழிக்காது.

இதுவே இன்று உலகளவில் அலுவலகங்களில் ஏன் வீடுகளிலும் தான் அதிகமாகப் பயன்படும் போஸ்ட்-இட் நோட்டாக (Post-it Note) உருவாகியது.

ஒட்டாத பசையோடு ஒட்டிக்கொண்ட ப்ரையின் யோசனை — அனைத்தையும் மாற்றி போட்டுவிட்டது.

“நம்மைச் சூழவுள்ள உலகத்தில் ஆயிரம் விடயங்கள் எமது புலன்களின் அவதானத்தின் கோணத்திற்குள் அகப்படாமல், வெளியாகிக் கிடக்கிறது. புலன்களுக்கு புலன் கொடுத்தல், பலன்கள் பலவற்றைப் பெற்றுத் தரலாம். உருவாக்கும் நேரம் இதுதான். நீங்கள் தயாரா?” — கோபாலு கேட்கிறான்.

போனஸ் தகவல்: போஸ்ட்-இட் நோட்ஸ் பலவற்றைப் பயன்படுத்தி 2009 ஆம் ஆண்டு, அற்புதமாக அசைவூட்ட குறுந்திரைப்படமொன்றை பேங்க்-யஓ லியோ உருவாக்கி வெளியிட்டிருந்தார் — வித்தியாசமாகவிருந்தது. அந்தக் காணொளிக்கான இணைப்பு இது.

- உதய தாரகை

மறுமொழி சொல்லியனுப்பி ட்விட்டரில் தொடர..

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

தும்மலின் விஞ்ஞானம்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 5 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

மனித உடலின் விசித்திரங்களின் பட்டியலை விரித்துக் கொண்டே போகலாம். உடல், தனது நிலையை ஒரு தகவில் வைத்துக் கொள்ளும் பொருட்டு, தன்னியக்கமாகவே பல விடயங்களைச் செய்வதை அவதானிக்க முடியும்.

அதில் ஒன்றுதான் தும்முதல். மனித உடலில் இடம்பெறும் சங்கீரணமான செயற்பாடாகத்தான் தும்மலைக் கண்டு கொள்ளலாம்.

“தும்மும் போது, கண் எப்போதுமே மூடித்தானிருக்கும்” என்பது ஒரு தகவல். “கண்கள் திறந்த நிலையில் உன்னால் தும்ம முடியாது” என்பது அவளிடமிருந்து கோபாலுக்கு வந்த சவால்.

உண்மையில் இந்தச் சின்னத் தகவலின் பின்னணியில் இருக்கின்ற விஞ்ஞானம் என்ன என்பதை அறிந்து கொள்ள ஆர்வப்பட்டேன். என் ஆர்வத்தின் விளைவின் உண்டான கேள்விக்கு கிடைத்த பதில்களில் விபரமான தொகுப்புதான் இப்பதிவாயிற்று.

பூமியிலுள்ள பெரும்பாலும் அத்தனை விலங்குகளும் தும்முகின்றன. “Sternutatory reflex” என்ற சொற்றொடர் மருத்துவத்தில் தும்மலைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

மூக்கின் மென்சவ்வில் நமைச்சலை உண்டுபண்ணக் கூடிய காரணி தொடுகையுறும் நிலையில், அந்தக் காரணியின் தொடுகை, மூளையின் சில பகுதிகளில் பிரதிபலிப்பை உண்டாக்கும். இந்தப் பிரதிபலிப்பின் காரணமாக இன்னும் பல நரம்பிணைப்புத் தாக்கங்கள் தொடர்ச்சியாக ஏற்படும்.

தும்முகின்ற நிலையில், உடலின் உள்ளே மிக அதிகமான அமுக்கம் பிரயோகிக்கப்படும். இதன் காரணமாக, குறிப்பிடத்தக்களவு வாயு அமுக்கம் கண்களில் பிரயோகிக்கப்படும்.

கண்களை, கண் குழிக்குளியிருந்து வெளியேற்றிவிடவோ, கண்கள் பிதுங்கி வெளியே வந்துவிடவோ இந்த அமுக்கத்தால் முடியாவிட்டாலும், கண்களிற்கு அசௌகரியத்தை ஏற்படுத்த இந்த அமுக்கத்தால் முடியும்.

டாக்டர். ஜி. எச். ட்ரம்ஹெல்லரின் அவதானிப்பின் படி, “கண்கள் ‘பிதிர்க்கக்‘ கூடாதென்பதற்காகவே தும்மும் போது நாம் கண்களை மூடுகின்றோம்.” எனச் சொல்கிறார்.

தும்மலின் போது கண்களில் ஏற்படக்கூடிய அமுக்கத்தின் காரணமாக, கண்ணில் அசாதரண நிலை தோன்றப்படாது என்பதற்காய் எமது உடலே தன்னியக்கமாக தற்காப்பில் ஈடுபடுவது – வடிவமைப்பின் வியப்பு விஞ்ஞானம்.

ஆனாலும், இந்தப் பெண், கண்களைத் திறந்த நிலையில் தன்னால் தும்மக்கூடியது தனது விஷேடமான திறமை என்கிறார். தும்மலின் பின் அவரின் கண்களின் பிரதிபலிப்பைக் காணொளியில் அவதானிப்பதன் மூலம், கண்களைத் தும்முகின்ற நிலையில் மூடிக் கொள்வது கட்டாயம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

“ஏன்?” என்ற கேள்விகளுக்குள் விஞ்ஞானம், வரலாறு என பல விடயங்கள் விரிந்து பரந்து கிடைக்கிறது. “ஏனெனக் கேட்பது கலை” — கோபாலு சொல்கிறான்.

- உதய தாரகை

மறுமொழிகள் சொல்லி ட்விட்டரில் தொடர..

வருடாந்தக் காதல் போட்டி

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 6 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

தனிமனிதன் சார்பான உலகம் பற்றிய விசாரிப்புகளில், பலவேளை யாரும் அறிந்திராத பல விடயங்கள் உதிப்பதுண்டு. அது நடக்கும் தருணங்கள் எதிர்கூற முடியாதவை போலவே, அதன் போது தோன்றும் விடயங்களும் ஏற்கனவே அறிந்து கொள்ளப்படாதவையே.

ஆய்வுகளின் அடிப்படையில் தனிமனிதனின் நடவடிக்கை சார்ந்த புலங்கள் நோக்கப்படுவது, காலங்காலமாக நடந்துவருவது நாமறிந்த நிகழ்வுதான். ஆனால், அவ்வாறான ஆய்வுகளில் ஒரு சில மொத்தத்தில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துக் கொண்டுவிடும்.

ஸ்டான்போர்ட் புலன்வழி அறிதல் மற்றும் நரம்பியல் நிழற்படவாக்க நிலையத்தில் ஒரு அரிதான பரிசோதனை இடம்பெற்றது. “முதலாவது வருடாந்த காதல் போட்டி” என்பது தான் அந்த ஆய்விற்கான பெயர்.

அன்பு, காதல், பாசம், நேசம் என விரியும் மனிதனின் விருப்புக்குரிய உணர்வின் அளவின் தேடலில் வெற்றியாளரைத் தேர்வு செய்கின்ற ஆய்வு அது. போட்டியின் விதிகள் இவைதாம்,

  • போட்டியாளர்கள் தங்களின் அன்புக்குரியவர்கள் பற்றி, 5 நிமிடத்திற்கு உச்சளவில் நினைத்துக் கொள்ள வேண்டும், இந்தவேளையில் அவர்களின் மூளையின் செயற்பாடு fMRI யந்திரம் கொண்டு அளந்து கொள்ளப்படும்.
  • மூளையில் அன்புக்குரித்தானதாக காணப்படும் நரம்பிய வேதியல் கூறுகளின் அளவு கணித்துக் கொள்ளப்படும்.

பல்வேறு வயதுகளிலுள்ள, ஆண், பெண் ஆகிய இருபாலாரும் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியின் முடிவு ஏதோவொரு வகையில் உங்களுக்கு வியப்பைத் தரக்கூடும்.

காதலிலுள்ள வேதியலின் சாரத்தை அழகியலாய் பதினைந்து நிமிடங்களில் மிக நேர்த்தியாக திரைக்குக் கொண்டுவர இயக்குனர் பிரண்ட் ஹொப்பிற்கு முடிந்திருக்கிறது. நுட்பத்தின் வெகுவான சங்கீரணமான தன்மைகளைத் தாண்டி, அன்பின் மென்மையை அற்புதமாகக் கொண்டு வரும் கமராக்கண் — வியப்பு.

ஒவ்வொரு போட்டியாளரும் அன்பைக் காண்கின்ற விதத்தை விபரிக்கின்ற முறை — காதல். பத்து வயதுப் பையன் மைலோ, அன்பைப் பற்றிச் சொல்லும் விபரம் — உச்சம். “Love is a feeling you have for someone you have feelings about.”

உத்வேகம் தரக்கூடிய, வாழ்வின் அழகிய அனுபவங்களை ஒரு கணம் உசுப்பிவிடுகின்ற இந்த ஆய்வின் ஆவணத்தை நீங்கள் கட்டாயம் காண வேண்டும். பதினைந்து நிமிடங்கள் விரிகின்ற இந்த லாவண்யத்தை காண இதுதான் தருணம்.

.

திண்காறையாகிவிட்டவைகளும், உணர்வுகளின் ஸ்பரிசத்தில் கனமிழந்து போகின்றன. “காதல், தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது” என்ற ரட்சகன் படப்பாடல் வானொலியில் கேட்கிறது.

- உதய தாரகை —

“நான்” என்றால் என்ன?

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 16 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

நேற்றைய தினம், நான் வழமையாக வாசிக்கின்ற Letter of Note வலைப்பதிவை வழமை போலவே வாசித்தேன். நிற்க, முதலில், Letters of Note என்ற தளத்தைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும்.

இரண்டு நபர்களிடையே நடக்கின்ற கடித உரையாடல்கள் சில வேளைகளில், ஒட்டுமொத்த சமூகத்தின் பார்வைக்கான அல்லது சிந்தனைக்கான களத்தை வழங்கும் சாத்தியத்தைக் கொண்டுள்ளது என்பதை வரலாறு சொல்லித்தந்திருக்கிறது.

கடிதத்திற்கான காத்திருப்பில் இது பற்றி கொஞ்சம் சொல்லியிருக்கிறேன். கடிதங்களின் உள்ளடக்கங்கள் காரணமாக, அவை உலகளவும் அறியப்பட வேண்டும் அத்தோடு அதன் உள்ளடக்கங்கள் அனைவரிடமும் உணர்வுகளை உசுப்பிவிட வேண்டும் என்பதைக் கருவாகக் கொண்டு, முக்கியமான சாரங்கள் நிறைந்த கடிதங்களையும் அதன் பின்னணிகளையும் வழங்குகின்ற தளமாக Letters of Note ஐ இனங்கண்டு கொள்ளலாம்.

இந்தத் தளத்தின் பல பதிவுகளும் என்னைக் கவர்ந்தவை. நேற்று அங்கு நான் வாசித்துணர்ந்த கடிதம் பற்றிச் சொல்லிவிட வேண்டுமென நினைத்தேன். இப்பதிவு உருவாயிற்று.

அய்ன் ரேண்ட் — புதின எழுத்தாளர், தத்துவவியலாளர் என இயல்பாக அறிமுகப்படுத்தலாம். உலகப் பிரசித்தம் வாய்ந்த இரண்டு புதினங்களின் ஆசிரியர். அதுமட்டுமல்ல, Objectivism என்கின்ற புறவய மெய்யியல் கோட்பாட்டின் உருவாக்குனர்.

இவரின் புதினமான, The Fountainhead என்பதை வாசித்து முடித்த வாசகி Joanne Rondeau, 1948 ஆம் ஆண்டு மே மாதம் இவருக்கு கடிதம் ஒன்று வரைந்தார். கடிதத்தின் சாரம் இதுதான்.

“நீங்கள் உங்கள் புதினத்தில், ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்று சொல்வதற்கு முன்னர் ஒருவர் ‘நான்’ என்பதை எப்படிச் சொல்ல வேண்டுமென அறிந்து கொள்ள வேண்டும்’ (To say ‘I love you’ one must first know how to say the ‘I’.) என குறிப்பிடுகிறீர்கள். இதை எனக்கு விளக்கியருளுங்கள்.”

இந்தக் கடிதத்திற்கான அய்ன் ரேண்டின் பதில்தான் ஒரு தனிநபர் பற்றிய அவர் மெய்யியலின் அடிப்படையையும் அதனோடிணைந்த சிந்தனையையும் தெளிவாக வெளிப்படுத்தியது. சிந்தனைக்கான கூறாகவும் அமைந்து கொண்டது.

அவரின் பதில், சொல்கின்ற நியாயங்களும் அதனைத் தாண்டிய சிந்தனைகளும் அர்த்தமுள்ளவை. அந்தப் பதில் கடிதத்தை யாவரும் படிக்க வேண்டுமென்ற இந்தப் பதிவின் தேவைகருதி தமிழாக்கம் செய்கின்றேன்.

22, மே 1948

அன்புள்ள ரொன்டியிவ்,

எனது The Fountainhead என்ற புதினத்தில் வருகின்ற ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்று சொல்வதற்கு முன்னர் ஒருவர் “நான்” என்பதை எப்படிச் சொல்ல வேண்டுமென அறிந்து கொள்ள வேண்டும்’ (To say ‘I love you’ one must first know how to say the ‘I’.) என்ற வாக்கியத்தை விளங்கப்படுத்தும் படி கேட்டிருந்தீர்கள்.

இந்த வாக்கியத்தின் கருத்து, எனது The Fountainhead என்ற புதினம் பூராகப் பரந்திருக்கிறது. நீங்கள் இந்த வசனத்தை கண்ட 400 பக்கத்திலும் இது பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. “நான்” என்பதன் அர்த்தம், யாருக்காக வேண்டியும் இருக்காத சுயாதீனமான, தன்நிறைவான கூறு ஆகும்.

ஒருவன், தன் அன்புக்குரியவர்களுக்காக மாத்திரம் இருப்பது அவனை சுதந்திரமான கூறாக உருவாக்காது மாறாக, அகநிலை சார்ந்த ஒட்டுண்ணியாகவே உருவாக்கும். ஒட்டுண்ணியின் காதலில் எந்த உயிர்ப்போ பெறுமதியோ கிடையாது.

காதல் பற்றிய வழமையான, (மிகத் தீய நிலை) பொருளற்ற அறவுரையாக கூறப்படுவது காதல் என்பது சுயநிலைத் தியாகம் என்பதாகும். ஒருவனின் சுயம்தான் அவனின் ஆன்மா. ஒருவன் அவனின் ஆன்மாவைத் தியாகம் செய்கின்ற நிலையில், அவனுக்கு அன்பை உணர யார் அல்லது என்ன எஞ்சியிருக்கப் போகிறது? உண்மைக் காதல் என்பது ஆழ்ந்த சுயநலமிக்கது. இந்தச் சொல்லின் மேன்மை பொருந்திய பொருளாக — ஒரு தனிநபரின் உயர்நிலை விழுமியங்களின் வெளிப்பாடாகவே காதலைக் கண்டு கொள்ள முடியும். ஒருவன் காதல் வயப்படுகின்ற நிலையில், அவன் தனக்கான மகிழ்ச்சியைத் தேடுகிறான் — அன்புக்குரியவர்களுக்கான தியாகத்தை அவன் நாடுவதில்லை. அப்படி தியாகம் தேவைப்படுகின்ற அல்லது எதிர்பார்க்கின்றவளாக அவன் அன்புக்குரியவளிருந்தால், அவள் அரக்கியாகத்தான் இருக்க முடியும்.

பிறருக்காகவே வாழ்கின்ற — தன் அன்புக்குரியவளுக்காக வாழ்கின்ற — ஒட்டுமொத்த மனித இனத்திற்காக வாழ்கின்ற — நிலையை, சுயமிழந்த, கூறுகள் இல்லாத அலகு எனலாம். சுயாதீனமான “நான்” என்பது, தனக்காகவே வாழ்கின்றவன். அப்போதே, அவனால், எந்த தீய சுயநிலை தியாகங்கள் பற்றிய பாசாங்கும் செய்ய முடியாமலிருக்கும். அவன் அன்பு செலுத்துபவர்களிடம் சுயநிலை தியாகத்தை எதிர்பார்க்கவும் மாட்டான். அதுதான் காதலில் திளைத்திருப்பதற்கும் நிலைத்திருப்பதற்கும் ஒரே வழி அத்தோடு இரண்டு பேருக்கிடையான சுயமரியாதை கொண்ட உறவும் வலுப்பெறவும் அதுவே ஒரேயொரு முறை.

அய்ன் ரேண்ட்.

“சுயம் என்பது மட்டுந்தான் ஒருவனின் நிலைப்பின் ஆதாரம். இருப்பதை இருப்பதாகச் சொல்லாமல், ஏதோ இருக்கிறோம் — ஆனால் இருக்கவில்லை என்ற வகையான விளக்கங்கள் பொருந்தாது. நீங்கள் நீங்களாகவே மட்டுந்தான் இருக்கலாம். நீங்களாகவிருக்காமல் இன்னொன்றாக இருக்க முயற்சிப்பதும் ஒரு வகை சுயவறுமை – சுயமிழத்தல்” என கோபாலு சொல்லச் சொன்னான்.

- உதய தாரகை —

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

உண்டியலும் காதலும்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 19 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

உலகின் அத்தனை லாவண்யங்கள், விடயங்கள் என எல்லாவற்றிற்கும் பின்னால் கவனிக்கப்படாத கதைகள் இருப்பது வழக்கம். கவனிக்கப்பட்ட கதைகள் பலவும் கூட காலத்தோடு மறைந்து செல்வதும் இயல்பாக நடப்பதொன்றுதான்.

நிறத்தில் கதையொன்றின் வலிமை பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். நாம் அறிந்திராத ஆனால் அறிந்து கொள்ள வேண்டிய பல விடயங்கள் பற்றியும் அவ்வப்போது பதிவுகளாய் உங்களோடு பகிர்ந்திருக்கிறேன்.

நேற்றைய தினம், பழைய கோப்புறையொன்றை திறக்க வேண்டியேற்பட்டது. ஒரு சில வருடங்களுக்கு முன்னர் எழுதி, கிழிக்கப்படாத பக்கங்கள் பலதையும் காண வாய்ப்பு உண்டானது.

நான் அந்தப் பக்கங்களின் வெண்மைக்குள் மைசேர்த்த நாள்களின் அழகிய நினைவுகள், அவற்றைக் கண்டவுடன் என் மனத்திரை முன் விரியக் கண்டேன்.

“நினைவுகள் அழியக்கூடாதென்றா, அவர்கள் பொருள்களை சேமித்து வைக்கிறார்கள்?” என்று திடீரென கோபாலு அதற்கிடையில் கேள்வி கேட்கிறான்.

நினைவுகளின் அழகில், இந்த நிமிடத்தின் நீட்சியும் நிம்மதியும் தொடர்ந்தால் நலமே — அவன்தான் பதிலும் சொன்னான்.

கோப்புறைக்குள் கிடந்த தாள்களில் பலதையும் மெல்ல மெல்ல புரட்டிக் கொண்டு, காலத்தின் விரைவான ஓட்டத்தையும் அதனோடே நிகழ்வுகளின் பாலான எனது கண்ணோட்டத்தையும் மனதால் நோக்குகிறேன்.

ஒரு தாள் — பல மேற்கோள்களைத் தன்னகம் குறித்து வைத்திருக்கிறது. “சிலர் மழையை உணர்ந்து கொள்கிறார்கள். ஏனையோர் வெறுமனே நனைகிறார்கள் — அவ்வளவுதான்” — ஓரமாய் இருந்து கொண்டு உண்மை சொல்லியது இந்தக் கூற்று.

“எனக்கு மகிழ்ச்சி உண்டாகட்டும் என்று வாழ்த்த வேண்டாம். எல்லா நேரமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென நான் எதிர்பார்க்கவில்லை. அதையும் தாண்டியும் மேலானதாய் இருக்க நினைக்கிறேன். தைரியம், சக்தி, நகைச்சுவை உணர்வு என்பன என்னிடம் குடிகொள்ள ஆசியுங்கள். அதுவே எனக்கு எப்போதும் தேவைப்படும்,” என்று ஆன் மொரோவ் லின்ட்பேர்க் சொன்னதாய் குறித்துள்ளேன் அந்தத் தாளின் ஒரு புறமாக.

அந்தத் தாளில் அப்படியாக மேற்கோள்கள் வாழ்ந்திருக்க, இன்னொரு தாளில் நான் அங்குமிங்குமாய் அறிந்து கொண்ட விடயங்கள் பற்றிய குறிப்பிருந்தது.

அதிலுள்ள சில விடயங்கள் பற்றி நிறத்தில் ஓரிரு வருடங்களுக்கு முன்னர் விபரமாகச் சொல்லியிருக்கிறேன். “அத்தி பூத்தாற் போல“, “அவள் சட்டையில் ஏன் அந்தப்புறமாக பொத்தான்?” என பல பதிவுகளில் அவை இடம் பெற்றிருக்கும்.

அதன் தொடர்ச்சியாய் சில சுவாரஸ்யமான தகவல்களை இன்று சொல்லலாம் என அந்தத் தாள் தூண்டியது. அதுதான் இந்தப் பதிவு.

உண்டியல்கள் பற்றிய நினைவுகள் உங்களிடம் இருக்கலாம். றப்பரினாலான உண்டியலில் சில்லறைக்காசுகள் சேர்த்து பின்னர், கொஞ்சம் சில்லறை வேண்மென்பதற்காய் கத்தரிக்கோலை அதனுள்ளிட்டு, காசு எடுத்த ஞாபகங்கள் — மலரும் நினைவுகள்.

நீங்கள் அவதானித்துள்ள ஒரு விடயத்தை இங்கு நினைவூட்டலாம் என விளைகிறேன். வங்கியிலோ அல்லது கடையிலோ உண்டியல்கள் பெரும்பாலும் பன்றி வடிவத்திலேயே செய்யப்பட்டிருக்கும். வர்த்தக விளம்பரங்களிலும் உண்டியல்களின் வடிவமாக பன்றிதான் காணப்படும்.

பன்றிக்கும் உண்டியலுக்கும் அப்படியென்ன தொடர்பு?

அந்தக் காலத்தில் ஐரோப்பாவில் பீங்கான், பாத்திரம் என்பன செம்மஞ்சள் நிறத்தாலான ‘pygg’ என்று சொல்லப்படுகின்ற ஒரு வகை களிமண்ணால் உருவாக்கம் செய்யப்பட்டது. இந்தக் களிமண் கொண்டு செய்யப்பட்ட உண்டியல், ஆங்கிலத்தில் “pygg jar” என்று அழைக்கப்பட்டது.

Pygg என்பதன் உச்சரிப்பு பன்றியைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான Pig என்பதை ஒத்திருந்ததால், Pygg jar என்பதை Pig jar எனப் பிழையாகப் புரிந்து கொண்ட குயவன் ஒருத்தனின் வினைதான் Pygg என்ற களி, பன்றியாகி வழக்கமான சேமிப்பின் குறியீடாக மாறிவிட்டது.

அந்தத் தாளின் இன்னொரு மூலையில், காதல் பற்றிய குறிப்பொன்றும் இருந்தது. அது என்ன?

டென்னிஸ் விளையாட்டின் போது, வீரரின் புள்ளியைச் சொல்கையில், பூச்சியம் என்பதைச் சொல்லும் Zero என்ற ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தமாட்டார்கள். Love என்ற சொல்லை பயன்படுத்துவார்கள். ஆமா, Love என்றால் காதல் தான் — நீங்க சொல்வது ரொம்ப கரெக்ட்.

அப்போ, பூச்சியத்திற்கும் காதலுக்கும் என்ன தொடர்பு?

டென்னிஸின் நவீனகால ஆரம்பம் இங்கிலாந்தில் தொடர்ந்தாலும், அதன் புராதன கால ஆரம்பம் பிரான்ஸிலிருந்து தொடர்கிறது. பிரான்ஸில் பிரபல்யமாகவிருந்த டென்னிஸில், ஒருவர் புள்ளிகள் பெறாத நிலையைக் குறிப்பதற்கு வழமை போலவே பூச்சியத்தைத் தான் பயன்படுத்தினார்கள்.

புள்ளியைக் குறித்துக்காட்டும் புள்ளிப்பலகையில் பூச்சியம் எப்போதும் போலவே முட்டை போன்று தோற்றம் பெற்றிருக்கிறது. அதை, அவர்கள், அவர்களின் மொழியில் முட்டை என்று சொல்லி வந்திருக்கிறார்கள்.

பிரஞ்சு மொழியில் முட்டையை, l’oeuf என அழைப்பர். டென்னிஸ் விளையாட்டு, அமெரிக்கா சென்ற போது, இந்த முட்டைக்கான பிரஞ்சுச் சொல்லை, பிழையாக அவர்கள் உச்சரித்ததால், l’oeuf என்பது love ஆனது. அதுவே, டென்னிஸ் விளையாட்டின் புள்ளியின் காதலும் ஆனது.

இப்படித்தான், பூச்சியத்திற்கும் காதலுக்கும் டென்னிஸில் முடிச்சு விழுந்தது.

- உதய தாரகை —

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

உச்சரிக்க முடியாது; உணர வேண்டும்.

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 21 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

1926 ஆம் ஆண்டு வெளிவந்த கார்ட்டூன் புத்தகம் தான் வின்னி த பூஃ என்பது. மனிதனின் குணாதிசயங்கள், பண்புகள் என்பவற்றைக் கொண்ட மிருகங்களின் புனைவுக் கதைகளாக இதனை கண்டு கொள்ள முடியும். இதன் தழுவல் நிலைப் படைப்புகள் 2000களிலும் திரைப்படங்களாகக் கூட எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டன.

ஆப்பிள் நிறுவனம் தனது iOS என்ற பணிசெயல் முறைமையில் iBooks ஐ அறிமுகப்படுத்திய போது, இந்த நூலை இலவசமாக தரவிறக்கம் செய்யும் சாத்தியத்தை வழங்கியது. ஸ்டீவ் ஜொப்ஸ் இதனை அறிமுகப்படுத்திய நிலையொரு கலை.

இந்தக் கதையாக்கத்தின் ஓட்டத்தில் நிறைய பாத்திரங்கள் வந்து சந்திக்கும். பூஃ என்பது ஒரு கரடி. அதன் நண்பர்களின் ஒருவர் தான் பிக்லட் என்பது மிகச் சிறிய இன்னொரு மிருகம். இது தன்னை வீரனாக உருவாக்க முயற்சிப்பதோடு தனது பயமெல்லாவற்றையும் தாண்டிய வாழ்வை நோக்கிய பயண வேட்கையோடும் காணப்படும்.

இந்தப் பாத்திரங்களிடையே இடம்பெறுகின்ற சம்பாஷணைகள் மிகவும் உணர்வு வலிமை நிறைந்தவை.

“அன்பை எப்படி உச்சரிப்பது?” என்று பிக்லட், பூஃவிடம் கேட்கும்.

“அது உச்சரிப்பதல்ல. உணர்ந்து கொள்வது” எனப் பதிலளிக்கும் பூஃ.

மனிதனின் அழகிய உணர்வுகளின் பயணத்தை வெளிப்படையாக இந்த மிருகங்களின் புனைவு பாத்திரங்களின் மூலம் எடுத்துத் செல்கின்ற A. A. Milne இன் கதை சொல்லும் பாணி — வியப்பு.

பண்டையக் காலத்தில் வாழ்ந்த நாட்டின் அரசனொருவன், மிகப்பெரிய ராஜசக்கரவர்த்தி ஆகிவிட வேண்டுமென்ற கனவோடு தினமும் வாழ்ந்து வந்தான்.

நாட்டின் அத்தனை விடயங்களையும் அடக்கியாள வேண்டுமென்கின்ற அவனின் வேட்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. இந்த நிலையை விரைவில் அடைந்து கொள்வதற்காய் நாட்டின் பிரபலமான ஞானியொருவரைச் சந்தித்து ஆசி பெறச் சென்றான்.

அரசன் சென்ற நேரத்தில், ஞானியோ தியானத்தில் திளைத்திருந்தார். கொஞ்சம் நேரம் காத்துக் கொண்டிருந்தான் அரசன். ஆனாலும், ஞானி, தியானத்தை நிறைவாக்கியதாகக் தெரியவில்லை.

இன்னும் கொஞ்ச நேரம் காத்துக் கொண்டிருந்தான். ஆனாலும் ஞானியின் தியானம் முடிந்த பாடில்லை.

“ஏ, நான் உலகத்தையே ஆள வேண்டுமென்ற வேட்கையில், அதற்காக உனது ஆசி பெறலாமென வந்தேன். நீ என்னுடன் கதைக்காமலா புறக்கணிக்கின்றாய்?” என்ற ஆவேசத்துடனும் கோபத்துடனும் ஞானியை நோக்கி அரசன் கத்திக் கொண்டு வெளியேற முற்பட்டான்.

திடீரென சுதாகரித்துக் கொண்ட ஞானி, “அரசே, உலகத்தை ஆள வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்கள். உங்களால் உங்களின் ஆத்திரத்தைக் கூட அடக்க முடியாமல் இருக்கும் போது, எப்படி பிறரை அடக்கி ஆளப் போகிறீர்கள்?” என்ற அமைதியாகச் சொன்னார்.

அரசன் அவ்விடத்திலிருந்து வாழ்வின் மீதான புதிய பார்வையுடன் வெளியே சென்றான்.

“உணரந்து கொள்கின்ற அனுபவ அறிவு நிலைகள் சொல்லித்தரும் பாடங்கள் மிக உயர்வானவை. எல்லோருக்கும் அவர்கள் சார்பான நிலையில் இந்தச் சம்பவத்தின் தாக்கமிருக்கும் — உணர்ந்து கொள்ளும் வலிமையிருக்கும்” என கோபாலு கடுமையாக நம்புகிறான்.

ஈற்றில் ஒரு புதிரையும் சொல்லச் சொன்னான், கீழ்வரும் படத்தில் ஆங்கில எழுத்தான O ஒன்று இருக்கிறதாம். அது எங்கிருக்கிறது என கண்டுபிடிக்கச் சொன்னான்.

- உதய தாரகை —

*இற்றைப்படுத்துகை (14.01.2012): குறித்த புதிரில் O என்ற எழுத்து ஒரு தடவையல்ல, நிறையத் தடவைகள் காணப்படுகின்றன. ஒரு O காணப்படுகிறது என்று நான் புதிரில் குறிப்பிட்டுள்ளதால், ஒரு O ஐக் கண்டவுடன் தேடல்களை நிறைவு செய்து, விடையை பலரும் மறுமொழியாகச் சொல்லியனுப்பி இருந்தனர். முக்கோணங்களைத் தாண்டியும் யோசிக்கப் பழக வேண்டுமென்பதைச் சொல்லவே (இதை Thinking out of the triangle என்று ஆங்கிலத்தில் சொல்லலாம். Box என்று சொல்ல விருப்பமில்லை. ;) ) இந்தப் புதிர் என கோபாலு சொல்லச் சொன்னான்.

கடிதத்திற்கான காத்திருப்பு

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 31 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

இது எப்போதும் இருந்ததில்லை. அடிக்கடியும் நடப்பதில்லை. எப்போதாவது நடக்கும். நடக்கும் போது, என்னை பிழிந்தெடுக்கும். இதிலென்ன வினோதம்?

காதலியிடமிருந்து கடிதமா? என்றால் இல்லை என்றுதான் பதில். அப்படியானால் யாரிடமிருந்து கடிதம்?

சிலவேளைகளில் அந்தக் கடிதத்தைப் பெற்றுக் கொள்வதற்கான எனது தேட்டம் ஒவ்வொரு நாளிகைகளிலும் என்னோடு பயணிக்கும். கடிதங்களோடான எனது உறவு என்பது ஒரு தொடர் கதை. பெரிய கதையும் கூட.

பாடசாலையில், வருத்தம் என்று சொல்லி வீடு செல்ல அனுமதி கேட்டு அதிபருக்கு எழுதிய கடிதம், கல்லூரி விடுதியிலிருந்து வீட்டிற்கு எழுதிய கடிதம், ஆசிரியரிடம் சுகம் விசாரித்து எழுதிய கடிதம், ஆக்கத்தை பிரசுரிக்க வேண்டி பத்திரிகைக்கு எழுதிய கடிதம் என கடிதங்களின் பாத்திரங்கள் ஏராளம்.

கல்லூரி விடுதியிலிருந்து பழைய பாடசாலை நண்பனுக்கு, பாடசாலை முகவரிக்கே கடிதம் எழுதிய நினைவுகளும் எனக்கிருக்கிறது. கடிதத்தை, பரிசு ஒன்று வந்ததாய் அவன் பார்ப்பதாய் சொல்வான். அழகான நினைவுகள் அவை.

கடிதம் — இப்போதெல்லாம் இதற்கு வேறு பெயர்கள், வேறு ஊடகங்கள். பேனாவைக் கொண்டு கடிதம் எழுதுபவர்கள் — ஏன் குறிப்பெழுதுபவர்கள் கூட குறைவுதான். இது பிழையல்ல.

பென்சிலிருந்து பேனாவிற்கு வந்த காலத்தில், பென்சிலை விட்டுவிட்டு பேனாவிற்கு மக்கள் கொடுத்த வரவேற்பையும் இப்படித்தான் உலகம் கண்டிருக்கும்.

நாம் வாழ்கின்ற காலத்திற்கு முன்பு வாழ்ந்தோர், தம் வாழ்நாளில் கண்டு வியந்தவைகள் பற்றிய விடயங்களை பகிர்கையில், எமக்கு அதன் பாலான வியப்பு புரிவதில்லை. அது எமக்கு பழையது. ஆனால், அவர்களுக்கோ அன்று அது ஆச்சரியம் தரும் புதிய விடயம்.

அதுபோலத்தான், ஒரு காலத்தின் வியப்புக்குரிய நிகழ்வு – இன்னொரு காலத்தின் இயல்புக்குரிய நிகழ்வு. இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இதை யதார்த்தமாக கண்டு கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

நீங்கள் பிறக்கும் போதிருந்த உலகத்தின் நிலை இன்றில்லை. என்றும் அது போலவும் இனி வராது.

இன்றளவில் கடிதங்களின் பிறப்புக்கான மூலங்களாக, இலத்திரனியல் கருவிகளின் விசைப்பலகைகள் மாறியிருக்கிறது. வேகமாக எல்லோராலும் எழுத முயற்சிக்க முடிகிறது. மொழிகள் கடந்தும் பலர் எழுதத் தொடங்கியிருக்கின்றனர்.

ஆனாலும், பேனாவினால் கடதாசியில் எழுதும் கடிதங்கள் மீதான காதல் அடியோடு ஒழிந்துவிட்டதாக கருதவியலாது. அப்படிக் கடிதங்களை காண்கின்ற வேளையில் ஒருவர் அடைகின்ற மகிழ்ச்சியின் அளவை அவர்களின் கண்களில் பலதடவை கண்டிருக்கிறேன்.

கடிதம் பெற்றுக்கொள்கின்ற நிலையில் தோன்றும் மகிழ்ச்சி மிகவும் அழகானதொன்று. கையால் எழுதாத கடிதங்களுக்குள்ளும் மகிழ்ச்சி பொதிந்த நிலைகள் உண்டென்பதை பல கடிதங்கள் சொல்லியிருக்கின்றன.

கடதாசியில் எழுதும் கடிதங்களாய், அண்மையில் எனக்கு வந்த மின்னஞ்சல்கள் சிலவும் அழகிய தமிழில் ஆனந்தம் சொறிந்தது. கடிதங்களை பொக்கிஷமாகக் காண்கின்ற உலகப் போக்கு எப்போதுமே இருந்தது. இருக்கும்.

உறவுமுறைக் கடிதங்கள் தொடங்கி உத்தியோகபூர்வ கடிதங்கள் வரை கடிதங்கள் சொல்கின்ற செய்திகளின் பரப்பு விசாலமானது. உலகப்புகழ் பெற்ற உத்வேகம் தரக்கூடிய கடிதங்களையும் நாம் கண்டுள்ளோம். ஆபிரிகாம் லிங்கன் தனது மகனின் வாத்தியாருக்கு எழுதிய கடிதம் உத்வேகத்தின் ஊற்று.

நான் பல நாட்கள் காத்திருப்பதும் ஒரு கடிதத்திற்குத் தான். அது இன்று வந்து ஆனந்தம் தந்தது.

கடிதங்கள் தரும் ஆனந்தத்தின் அளவு கூட, அதற்கான காத்திருப்பின் அளவிற்கு நேர்விகித சமனாகவே இருக்கிறது என்று நியூட்டன் எந்த விதியையும் உருவாக்கவில்லை. ஆனால், அதுதான் உண்மையென உணர்ந்து கொள்கிறேன்.

- உதய தாரகை —

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

இந்தப் பதிவை ஒலி வடிவில் கேட்க:


iTunes இல் நிறம் Podcast Niram Podcast
Follow

Get every new post delivered to your Inbox.

Join 531 other followers